(வருணித்துச்) சொல்லுதற்கு அரிய செல்வத்தையுடைய வைசியர்களது பெரிய கிருகங்களும், (உள்ளன); (எ - று.) வினைவருவிக்க. வீடு என்னும் ஒரு பொருளைத்தரும் ஆலயம், மாளிகை மனை, இடம் என்ற நான்கு சொற்கள், இக்கவியில் வந்தது - பொருட்பின்வருநிலையணி. 'ஆசிலா' முதலிய அடைமொழிகளை அந்தணர் முதலியோர்க்குக் கூட்டாமல், ஆலயம் முதலியவற்றோடு இயைப்பினும் அமையும். பிராமணர் பூதேவராதலால், அவரது வீடு தேவகிருகத்துக்குரிய 'ஆலயம்' என்ற பெயராற் கூறப்பட்டது, அமைச்சர் அரசரது அருகிலிருந்து அறிவு கூறுபவரென்று பொருள்படும்; 'உழையிருந்தார்,' 'உழையர்' என்பன இப்பொருள்கொண்டவையே. கடி - சிறப்பு, விளக்கம், காவல், மணம் முதலிய பலபொருள்களைக் குறி்க்கும் உரிச்சொல். இப்பாட்டில், அடிதோறும் 'ஒருபால்' என இறுதியில் ஒன்றி வந்தது - இயைபுத்தொடை; சொற்பொருட் பின்வருநிலையணி. (126) 67.- இது - அந்நகரத்துப்பலவகையொலிகளைக் கூறுகின்றது. மங்கலந்திகழ்மனையெலாம்வலம்புரியோசை திங்கடோய்நெடுந்தலமெலாஞ்செழுஞ்சிலம்போசை அங்கண்மாநகரனைத்துமும்முரசதிரோசை எங்கணுங்கடவுளரிடந்தொறுமுழவோசை. |
(இ -ள்.) மங்கலம் திகழ் மனை எலாம் - சுபகாரியங்கள் விளங்கப்பெற்ற வீடுகள்தோறும், வலம்புரி ஓசை - வலம்புரிச்சங்குகளின் ஒலிகளும், - திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் - சந்திரனையளாவிய உயர்ந்த உபரிகையிடங்களிலெல்லாம், செழுஞ் சிலம்பு ஓசை - (மாதர்கள் காலிலணியும்) அழகிய சிலம்பென்னும் அணியின் ஒலிகளும்,- அம் கண் மாநகர் அனைத்தும் - அழகிய இடத்தையுடைய பெரிய அந்நகரம் முழுவதிலும், மும்முரசு அதிர் ஓசை - மூன்றுவகை முரச வாத்தியங்கள் ஒலிக்கிற ஒலிகளும்,- எங்கணும் கடவுளர் இடந்தொறும் - எவ்விடத்துமுள்ள தேவாலயங்களிலெல்லாம், முழ ஓசை - மத்தளங்களின் ஒலிகளும், (உள்ளன); (எ - று.) இதற்கும் முடிக்குஞ்சொல் வருவிக்க, ஒவ்வோரிடத்தையும் வருணித்துக் கூறும்போது ஆங்காங்குப் பலவகை யோசைகள் உள்ளன வெனக்கூறுதல், கவிமரபு. இப்பாட்டில், ஒவ்வொரு அடியிலும் இறுதியில் ஓசையென வந்தது - அணியிலக்கணத்தில் சொற்பொருட்பின் வருநிலையும், யாப்பிலக்கணத்தில் இயைபுத்தொடையுமாம். மங்கலந்திகழ் என்பதற்கு - சாமரம் தீபம் முதலிய மங்கலப் பொருள்கள் விளங்கப்பெற்ற என்றுங் கொள்ளலாம். மும்முரசு - வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு என்பன. கடவுளர் - (இவ்வுலக சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர். முழ - முழா என்னுங் குறியதன் கீழ் ஆ, குறுகிற்று. மேல்மாடத்துக்கு 'சந்திரசாலை' என்று வடமொழியில் ஒருபெயர் உள்ளதுபற்றி, 'திங்கள்தோய்' நெடுந்தலம்' என்றன ரென்னலாம். (127) |