பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 167

டான்; நால்இரு திசையினும் - எட்டுத்திக்குக்களிலும், முரசு - பேரிகைகள்,
தழக்கின் - ஆரவாரத்துடனே, எழ - மிக்குத் தோன்ற, சமரில் - போரில்,
உழக்கினால் அலது - கலக்கினாலல்லாமல், உணர்வனோ - (அவன்)
அறிவானோ? (அறியான்),' என்று உரைத்தான் - என்று (துரியோதனன்
தன்மையை) எடுத்துக் கூறினான்; (எ - று.)

    துரியோதனன் முறைப்படி நடவாதவ னென்பது அவனது
கொடியிலேயேவிளங்கு மென்பான், அத்துரியோதனனை
'அடலரவுயர்த்தகோன்' என்றான். இவ்வாறு விசேஷ்யத்தை ஒருகருத்துப்
படச்சொல்வது, கருத்துடையடைகொளியணியாம்.உழக்கினால் - 'உழ'
என்பதன்பிறவினையான உழக்கு - பகுதி: உரிமை - உரிய பொருளுக்குப்
பண்பாகுபெயர்.  நாலிருதிசை - பண்புத்தொகை; நான்கு பெருந்திக்குக்களும்,
நான்கு மூலைத் திக்குக்களும்.  வழக்கு - மூத்தவனுக்கு அரசு உரியது
என்பதும், 'பன்னிரண்டுவருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ்
செய்துவந்தால் உரியபாகத்தைக் கொடுப்பேன்' என்று கூறிய சொல் தவறாமல்
முன் கொடுத்ததை மீண்டும் கொடுத்தல்வேண்டு மென்பதும் என்க.   (153)

94.-கண்ணன்'அரசுகொடாவிடின் பாண்டவர் போரினாற்
பெறுவர்' என்றல்.

வாளைவாவியிலுகண்டெழவளரிளங்கமுகின்
பாளைவாயளிமுரன்றெழும்பழனநாடுடையான்
நாளைவாழ்வவர்க்களித்திலனெனிலெதிர்நடந்து
மூளைவாயுகமுடிப்பர்வெம்போரெனமொழிந்தான்.

     (இ -ள்.) (அதுகேட்டுக் கண்ணபிரான்), 'வாளை-வாளைமீன்கள்,
வாவியில் - நீர்நிலைகளிலே, உகண்டு எழ - துள்ளியெழும்புதலினால், வளர்
இளங்கமுகின் பாளைவாய் - (அருகில்) வளர்ந்துள்ள இளமையான பாக்கு
மரங்களின் பாளைகளிலுள்ள, அளி - வண்டுகள், முரன்று எழும் - ஒலித்து
எழப்பெற்ற, பழனம் நாடு - கழனிகளுடைய குரு நாட்டை, உடையான் -
(தனதாக) உடையவனாகிய துரியோதனன், நாளை - நாளைக்கு, வாழ்வு -
செல்வவாழ்க்கையை [இராச்சியபாகத்தை], அவர்க்கு - அப்பாண்டவர்கட்கு,
அளித்திலன் எனில் - கொடானானால், - (அந்தப்பாண்டவர்கள்), எதிர்நடந்து
- எதிர்த்து வந்து, மூளை வாய்உக - (அத்துரியோதனாதியர்களது) மூளைகளை
வாய்வழியே சிந்தும்படி, வெம் போர் - கொடிய யுத்தத்தில், முடிப்பர் -
(அவர்களை) அழித்திடுவார்கள்,' என - என்று, மொழிந்தான் -
கூறியருளினான்; (எ - று.)

    முன்னிரண்டடி, மருதநில வருணனை.  கமுகம்பாளையில் வண்டு
ஒலித்து எழுதற்கு வாவியின் வாளை குதித்தெழுதல் காரணமாதலால், எழ
என்னுஞ் செயவெனெச்சம் - இறந்தகாலம்.  நாளை - எதிர்காலங் குறிப்பதோ
ரிடைச்சொல்:  இனி விரைவில் என்றபடி.  'அவர்க்கு' என்றதிலுள்ள
அகரம் -நெஞ்சறி சுட்டு; அன்றி, பிரசித்தியைக் காட்டுவதுமாம்.  மூளை -
ஒருவகைநிணம்.                                         (154)