பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 185

மகாலோபியான துர்க்குணமுடைய துரியோதனனிடம் அன்பர்க்காக இவ்வாறு
இரந்தான் எனப் பரத்துவமும் சௌலப்பியமும் தோன்றுமாறு காண்க.  கார்
-துரியோதனனுக்கும், உரும் - கடுஞ்சொல்லுக்கும் உவமை.          (175)

116.-துரியோதனன் அதனையும்மறுத்தல்.

மாடளிக்குல நெருங்குபைந்துளவ மாலையாய்மகரவேலைசூழ்
நாடளித்திடவு மைந்துபேருடைய நகரளித்திடவும்வேண்டுமோ
காடளிக்கவதனிடை திரிந்துறை கரந்துபோயினர்கள் காணவோர்
வீடளிக்கினும் வெறுப்பரோவிதனைவிடுகவென்றெதிர்விளம்பினான்.

     (இ -ள்.) (அதற்குத் துரியோதனன்), 'மாடு - பக்கங்களிலே, அளி குலம்
- வண்டுகளின் கூட்டம், நெருங்கு - இடைவிடாது மொய்க்கப்பெற்ற,
பைந்துளவம் - பசுநிறமான திருத்துழாயினாலாகிய, மாலையாய் -
மாலையையுடைய கண்ணனே! - மகரம் வேலை சூழ் நாடு அளித்திடவும் -
சுறாமீன்களையுடைய கடல் சூழ்ந்த நாடு முழுவதையும் கொடுக்கவும், பேர்
உடைய ஐந்து நகர் அளித்திடவும் - பெயரையுடைய ஐந்து ஊர்களைக்
கொடுக்கவும், (அவர்களுக்கு), வேண்டுமோ-? காடு அளிக்க - (நாம் முன்பு)
காட்டை இடமாகக் கொடுக்க, அதனிடை திரிந்து - அதில் அலைந்து, உறை
கரந்து போயினார்கள் - அவ் வசிக்குமிடத்தினின்றும் உருமறைந்து ஓடிப்
போனவர்கள், காண - (மீண்டுந் தம்மதாகப்) பார்க்கும்படி, ஓர் வீடு
அளிக்கினும் - ஒரு வீட்டைக் கொடுத்தாலும், வெறுப்பரோ - (அதனை
வேண்டாமென்று) வெறுத்திடுவார்களோ? [மாட்டார்களென்றபடி].  இதனை
விடுக - (என்பக்கல் சிறிதேனும் இடம்பெறும்) இக்கருத்தை (இனி நீ) ஒழிக',
என்று எதிர் விளம்பினான் - என்று மறுமொழி கூறினான்; (எ - று.)

    'எதிர்' என்ற சொல்லில், விரோதமான மொழியென்ற கருத்தும்
இரட்டுறமொழிதலாற் பெறப்படும்; கீழ் 107 - ஆங் கவியில் 'எதிர் பகருவான்'
என்றதிலும் இங்ஙனம் காண்க.  ஐந்துபேருடைய - பஞ்சபாண்டவர்களது
என்று உரைப்பாரு முளர்.  உறையுமிடம், உறை.                 (176)

117.-இதுவும், மேற்கவியும்ஒரு தொடர்: கண்ணன்
துரியோதனனுக்கு அறிவு கூறுதல்.

தந்தைகாதலுறு தன்மைகண்டிளையதாய்பயந்தவிருதம்பியர்க்
கிந்தவாழ்வு மரசுங்கொடுத்தவனுநின்குலத் தொருவ னிங்குளான்
முந்தமாநிலமனைத்தினுக்குமுயர்முறைமையா லுரியவரசருக்
கைந்துமாநகருநீகொடாதொழியினென்ன தாகுமுனதரசியல்.

     (இ -ள்.) தந்தை - தனது பிதா, காதல் உறு - ஆசைமிகுந்த,
தன்மை -தன்மையை, கண்டு - பார்த்து, இளைய தாய் பயந்த இரு
தம்பியர்க்கு - தனதுசிறிய (மாற்றுத்) தாய்பெற்ற புதல்வரான தனது