பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 205

     (இ -ள்.) (பின்பு), கங்கை மைந்தன் - வீடுமன், இரவி மைந்தனொடு-
கர்ணனுடனே, எதிர் வாய்மை ஒன்றையும் - பிரதியான
வார்த்தையொன்றையும்,இசைத்திலன் - கூறாதவனாய், 'அன்று - (போர்
நடக்கும்) அக்காலத்தில்,வெம் சமரில் - கொடிய போர்க்களத்தில், பொர -
போர் செய்கையில்,அறிந்திடுதும் - (இவனது ஆண்மையை நேரில்)
அறிவோம்,' என்று - என்றுகருதி, எழுந்து தனி போயினான் -
(அச்சபையைவிட்டு) எழுந்து தனியேசென்றான்; அரவம் வெம் கொடி
உயர்த்த கோவும் - பாம்பின்வடிவமெழுதியகொடிய துவசத்தை உயர எடுத்த
துரியோதனராஜனும், இகல் அரசருக்கு -வலிமையையுடைய
அரசர்களுக்கெல்லாம், விடை நல்கினான் - (சபையினின்று)செலவு கொடுத்து
அனுப்பினான்; (இதுநிற்க), விரவு பை துளபம் மாலையான் -பொருந்தின
பசிய திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானது, விதுரன்மனையில்
உற்றது - விதுரனது மாளிகையில் நடந்த செய்தியை, விளம்புவாம் -
(இனிக்) கூறுவோம்; (எ - று.) - அதனை மேற்காண்க.

    நான்காமடி - கவிக்கூற்று, விளம்புவாம் - கவிகளுக்கு உரிய இயற்கைத்
தன்மைப்பன்மை, என்று - என்று சொல்லி, வாய்மை - வாயின்தன்மை;
வாய் -சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  இசைத்திலன் - முற்றெச்சம்.
உற்றது -வினையாலணையும் பெயர்.                          (200)

வேறு.

141.-விதுரன் வில்லைமுறித்த காரணத்தைக் கண்ணன்
வினாவுதல்.

பொருசிலைமுறித்தவீரன்கோயிலிற்புகுந்துநேமிக்
குரிசிலைவணங்கியாங்கணிருப்பவக்குரிசினோக்கி
இருசிலையுண்டென்றிந்தவிருநிலத்தியம்பும்வில்லின்
ஒருசிலைமுறித்தசீற்றமென்கொலோவுரைசெயென்றான்.

     (இ -ள்.) (இது நிற்க), பொரு சிலை முறித்த வீரன் - போர் செய்தற்கு
உரியவில்லை முறித்துப்போகட்ட சுத்தவீரனான விதுரன், கோயிலில்புகுந்து -
(தனது) சிறந்த மாளிகையிலே சென்று, நேமிகுரிசிலை வணங்கி - (அங்குத்
தனக்குமுன் சென்றிருந்த) சக்கரபாணியான கண்ணபிரானை நமஸ்கரித்து,
ஆங்கண் இருப்ப - அவ்விடத்தில் இருக்கையில்,- அ குரிசில் -
அந்தக்கண்ணபிரான், நோக்கி - (விதுரனைப்) பார்த்து, 'இருசிலை உண்டு
என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் ஒரு சிலை முறித்த சீற்றம் -
இரண்டு சிறந்த விற்கள் உள்ளனவென்று இந்தப்பெரிய பூலோகத்திற்
(பிரசித்தமாகச்) சொல்லப்படுகிற விற்களுள் ஒன்றாகிய உனது வில்லை (நீ)
முறித்துப்போகட்ட கோபம், என்கொலோ - யாது காரணம்பற்றியதோ?
உரைசெய் - சொல்,' என்றான், என்று கேட்டருளினான்; (எ - று.)

    விதுரன் வில்முறித்தசெய்தியைக் கண்ணன் தனது ஞானத்
திருக்கண்ணினாலும் ஜனவதந்தியினாலும் அறிந்தன னென்க.