வரம்பில்வெஞ்சேனையோடும்வளைந்தினிமாயன்றன்னைக் கரும்பொழுதகலுமுன்னேகொல்வதேகருமமென்றான். |
(இ -ள்.) பொரும் படை மைந்தன் கூற - போர்செய்தற்குரிய சேனையையுடைய குமாரனான துரியோதனன் இவ்வாறுசொல்ல,- தந்தையும் - பிதாவான திருதராட்டிரனும்,- பொருந்த சொல்வான் - (தன்மகன் மனத்துக்கு) இசையும்படி கூறுபவனாய், 'இரு புலி வலையில் பட்டால் - பெரிய புலியொன்று (தானாகவந்து) வலையிலே அகப்பட்டுக்கொண்டால், எயினர் ஆனோர் - வேடர்களானவர்கள், விடுவரோ - (அதனைக்கொல்லாமற்) புறத்துச் செல்லவிட்டிடுவார்களோ? [விடாரன்றோ?]; (ஆதலால்), இனி - இப்பொழுது, கரும்பொழுது அகலும் முன்னே - (இருளாற்) கரிய இவ்விராப்பொழுது கழியுமுன்னமே, மாயன்தன்னை - கண்ணனை, வரம்பு இல்வெம் சேனையோடும் வளைந்து - எல்லையில்லாத கொடிய சேனையுடனே(சென்று) சூழ்ந்து, கொல்வதே - கொன்றுவிடுவதே, கருமம் - செய்யத்தக்கதொழில்,' என்றான் - என்று கூறினான்; (எ - று.) எடுத்துக்காட்டுவமையணி. படை - ஆயுதமுமாம். இரும்புலி என்றது -வலையிற்சிக்குவிக்கவொண்ணாத புலியென்றபடி. இருளின் கருமை, பொழுதின்மேல் ஏற்றப்பட்டது. பகலிற் கொல்லமுடியாது என்பான் 'கரும்பொழு தகலுமுன்னே' என்றும், தனியே கொல்ல முடியாதென்பான் 'வரம்பில் வெஞ்சேனையோடும் வளைந்து' என்றுங்கூறினான். (231) 172.-இதுமுதல் மூன்று கவிகள்,அதனை விகர்ணன் தடுத்ததைக் கூறுவன. கண்ணிலானுரைத்தமாற்றங்கேட்டலுங்காவலோரின் மண்ணிலாரிதற்குமுன்புதூதரைவளைந்துகொன்றார் எண்ணிலாவிந்தவெண்ணமெவ்வுழிக்கற்றதென்று வெண்ணிலாமுறுவல்செய்துவிகன்னனும்விளம்பலுற்றான். |
(இ -ள்.) கண் இலான் உரைத்த மாற்றம் - ஊனக்கண்ணோடு ஞானக்கண்ணுமில்லாத திருதராட்டிரன் (இவ்வாறு) சொன்ன வார்த்தையை, கேட்டலும் - கேட்டவளவிலே, விகன்னனும் - விகர்ணனென்னுந் துரியோதனன் தம்பியும்,- 'மண்ணில் - உலகத்தில், காவலோரில் - அரசர்களுள், இதற்குமுன்பு -, தூதரை வளைந்து கொன்றார் - தூதுவந்தவரைச்சூழ்ந்து கொலை செய்தவர், ஆர் - யார்? [எவருமில்லை யென்றபடி]; எண்இலா இந்த எண்ணம் - ஆலோசனையில்லாத இந்த நினைப்பு, எ உழி கற்றது- எந்த இடத்தினின்று அறிந்துகொண்டது?' என்று-, வெள்நிலாமுறுவல் செய்துவிளம்பல் உற்றான் - வெண்ணிறமான சந்திரகாந்திபோல வெள்ளியபுன்சிரிப்பைச் செய்து கூறத்தொடங்கினான்; (எ - று.) - அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க.
விகன்னன் - விகர்ணன்; வடசொற்றிரிபு; இவன் - துரியோதனனது இறுதித்தம்பி; இராவணன் தம்பியருள் விபீஷணன்போல, |