பக்கம் எண் :

230பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) (அதுகேட்டு), சௌபலன் - (காந்தாரநாட்டரசனான)
சுபலனென்பவனது புத்திரனாகிய சகுனி,- '(இக்கண்ணன்), பதிபெயர்ந்து ஏகி-
இவ்வூரைவிட்டு நீங்கிச்சென்று, நாளை - நாளைக்கு, பகைவரை கூடும்
ஆயின்- பகைவர்களான பாண்டவர்களைச் சேர்ந்திடுவானானால், விதிபயன்
என்ன -(முற்பிறப்பிற்செய்த கொடிய) ஊழ்வினைப் பயன்போல, நம்மை வெம்
சமர்வெல்ல ஒட்டான் - நம்மைக் கொடியபோரிற் சயிக்க விடமாட்டான்;
(ஆதலால்), வேறு மதிப்பது என் - வேறே ஆலோசிக்கவேண்டுவது என்ன?
கள்ளம் மாயனை - வஞ்சனையையுடைய கண்ணனை, மனையில் கோலி -
(நம்முடைய) வீட்டிலே (வரவழைத்து) வளைந்துகொண்டு, சதிப்பதே -
வஞ்சனையாக வெல்வதே, கருமம் - செய்தொழிலாம்,' என்று - என்று
சொல்லி, பின்னும் சொல்வான் - மறுபடியுங் கூறுவான்; (எ - று.)

    விதிப்பயன் தவறாததுபோல, இவன் நம்மை வெற்றியடைவியாமை
தவறாதென்பான், 'விதிப்பயனென்ன நம்மைவெஞ்சமர் வெல்ல வொட்டான்'
என்றான்.  கள்ளம் - தொழிற்பெயர்; கள் - பகுதி, அம் - விகுதி: இது -
வேறுவிகுதிபெற்று, களவு எனவும் வரும்; இதன் எதிர்மறை - கள்ளாமை.
கோலுதல் - அகப்படச் செய்தலும், சூழ்தலுமாம்.  'மனையிற் கோலிச்சதிப்பது'
என்பதற்கு, விதுரன் வீட்டிலேயே வளைந்து கொல்லுவதென உரைப்பினுமாம்.
                                                        (238)

179.

கொல்லுவதியற்கையன்றுகுழிபறித்தரக்கரோடு
மல்லரையிருத்திமேலோராசனம்வகுத்துநாளை
எல்லிடையழைத்துவீழ்த்தியிகலுடன்விலங்குபூட்டித்
தொல்லருஞ்சிறையில்வைத்தறூதருக்குரிமையென்றான்.

     (இ -ள்.) 'கொல்லுவது - (தூதரைக்) கொல்லுதல், இயற்கை அன்று -
(நல்லரசர்க்குத்) தக்கதன்று; குழி பறித்து - பெரும்பள்ளந் தோண்டி,
அரக்கரோடு மல்லரை இருத்தி - இராக்கதர்களையும் மற்போர் வீரரையும்
(அதனுள்ளே மறைவாக) இருக்கவைத்து, மேல் - மேலே, ஓர் ஆசனம்
வகுத்து- ஒரு ஆசனத்தை அமைத்து, நாளை எல்லிடை அழைத்து -
நாளைப்பகலிலேவரவழைத்து, வீழ்த்தி - (அக்குழியிலே) விழும்படிசெய்து,
இகலுடன் -வலிமையோடு, விலங்கு பூட்டி - விலங்கைப்பூட்டி, தொல் அருஞ்
சிறையில்வைத்தல் - பழமையான பொறுத்தற்கரிய சிறைச்சாலையிலே
வைத்திடுதலே,தூதருக்கு உரிமை - தூதர்களுக்குச் செய்தற்குரிய தண்டனை,'
என்றான் -என்று சொன்னான், (சகுனி); (எ - று.)

    இயற்கை - தொழிற்பெயர்; இயலுதலென்க; இயல் - பகுதி, கை -
விகுதி. நிலத்திற் குழிந்துள்ளது, குழி.                    (239)

180.-இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்: துரியோதனன்
படுகுழியமைத்ததைக் கூறும்.

மாதுலனுரைத்தமாற்றமருகனுமிசைந்துகங்குற்
போதிடையனேகமல்லர்வருகெனப்புகன்றுதானும்