பக்கம் எண் :

232பாரதம்உத்தியோக பருவம்

182.

பெரும்பிலவறையைவேயின்பிளப்பினானிரைத்துமூடி
அரும்பெறன்மணிகளாலோராசனமதன்மேலாக்கிச்
சுரும்பிமிர்மாலைதூக்கித்தொழிலுடைவிதானமேற்றி
வரம்பிலாவென்றிவேலான்மாறிலாவண்ணஞ்செய்தான்.

     (இ -ள்.) வரம்பு இலா வென்றி வேலான் - எல்லையில்லாத
வெற்றியைத் தருகின்ற வேலாயுதத்தையுடைய துரியோதனன், (தன்
வேலையாட்களைக்கொண்டு), பெரும் பிலம் அறையை - பெரிய பள்ளமான
அந்நிலவறையை, வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி  - மூங்கில்களின்
பிளப்புக்களினால் மேலே வரிசையாய்ப் பரப்பிமூடி, அதன்மேல் -
அம்மூடியதன் மேல், அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் ஆக்கி -
அருமையான பெறுதலையுடைய இரத்தினங்களால் ஒரு பீடத்தைச்
சித்தஞ்செய்து, சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழில் உடை விதானம் ஏற்றி-
வண்டுகள் மொய்த்து ஒலிக்கப்பெற்ற பூமாலைகளைத் தொங்கவிடப்பெற்று(ப்
பலவகை விசித்திர) வேலைப்பாட்டையுடைய மேற்கட்டியை
(அவ்வாசனத்திற்குமேல்) உயரத்தில் அமைத்து, மாறு இலா வண்ணம்
செய்தான் - வேறுபாடு தோன்றாதபடி (எல்லாவற்றையும்) அமைத்து
வைத்தான்;(எ - று.)

    'அரும்பெறல்மணி' என்றது - வடமொழிநடை; இதனை
"அருங்கேடன்,""சென்றுசேர்கல்லாப்புள்ள புள்ளி, லென்றூழ்வியன் குளம்"
என்பன போலக்கொள்க.  இனி, பெறலருமணி என மாற்றி இயைத்து,
பெறுதற்கு அருமையானமணியெனினு மமையும்.  பிளப்பு - பிளக்கப்பட்ட
பொருளுக்குத்தொழிலாகுபெயர்; பு - விகுதி. தூக்கி - வினையெச்சம்; உடை
என்னுங்குறிப்புப் பெயரெச்சத்தைக் கொண்டது.  விதாநம் - வடசொல்.
மாறிலாவண்ணம் - (நிலவறையின் மேல் அமைத்துவைத்தது)
தோன்றாதபடி.                                             (242)

183.-இதுமுதல் மூன்று கவிகள்- சூரியோதய வருணனை.

அடியவர்மனத்திலுள்ளவாரிருட்கங்குறீர்க்கும்
நெடியவனிருக்கவென்றுநிலவறைவிரகிற்செய்த
கடியவனியற்கையஞ்சிக்கங்குலுங்கடிதிற்போகப்
படியவர்துயிலும்போகப்பரிதியுமுதயஞ்செய்தான்.

     (இ -ள்.) 'அடியவர் மனத்தில் உள்ள - (தனது) தொண்டர்களது
உள்ளத்திலுள்ள, ஆர் இருள் கங்குல் - (மற்றையோர்க்குப் போக்குதற்கு)
அரிய (அஜ்ஞாந) அந்தகாரமாகிய இரவை, தீர்க்கும் - அழித்தருளுகிற,
நெடியவன் - பெருமைக்குணமுடைய கண்ணபிரான், இருக்க - வீற்றிருக்க
வேண்டும்,' என்று - என்று கருதி, விரகின் - வஞ்சனையாக, நிலம் அறை
செய்த - நிலவறையைச் செய்துமுடித்த, கடியவன் - கொடுந்தன்மையுடைய
துரியோதனனது, இயற்கை - துஷ்டசுபாவத்துக்கு, அஞ்சி - பயந்து, கங்குலும்
- இராத்திரியும், கடிதின் போக - விரைவாகக்கழிய, பரிதியும் - சூரியனும்,
படியவர் துயிலும் போக - நிலவுலகத்திலுள்ளாரது நித்திரையும் ஒழியும்படி,
உதயம் செய்தான் - உதித்தலைச்செய்தான்; (எ - று.)