பக்கம் எண் :

242பாரதம்உத்தியோக பருவம்

கடவுளர்பகையை கதிர்மகுடம் முருக்கிய வேள் அயில் கொடுகுத்திய
நெடுவரை ஒத்தனர் - மயில்வாகனத்தை யேறிச்சென்று தேவர்களது
பகைவர்களாகிய (சூரபதுமன் முதலிய பல) அசுரர்களை ஒளி பொருந்திய
கிரீடத்தையுடைய தலைகளை யழித்திட்ட சுப்பிரமணிய மூர்த்தியால்
வேலாயுதத்தைக்கொண்டு துளைக்கப்பட்ட பெரிய (கிரௌஞ்ச) மலையை
ஒத்தார்கள்; (எ - று.)

    சிவபிரானது இளைய குமாரனாய்த் தேவர் வேண்டுகோளால்
அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாதிபதியாம் பொருட்டு அவதரித்த
முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லும் வழியிடையே,
கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரிய மலைவடிவங் கொண்டு அவனை
நலிவதாக எதிர்வந்து நிற்க, அதன்மேல் அப்பெருமான் தனது
தெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைத் துளைத்து
அழித்திட்டன னென்பது பின்னிரண்டடிகளிற்குறித்த கதை; பரசுராமனும்
சுப்பிரமணியனும் பரமசிவனிடம் வில்முதலிய ஆயுதப் பயிற்சியைச் செய்து
முடித்த பின்பு, இவர்களுள் உயர்வு தாழ்வு அறியும் பொருட்டுச் சிவபிரான்
உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்ச மலையைச்
சுட்டிக்காட்டி 'இதனைத் துளைத்திடும்' என்று நியமிக்க, பரசுராமன்
அம்பெய்து அதனைத் துளையிட்டுக்காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை
வீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டனனென்றும் கதை கூறப்படும்.

     துயில்அரியோன் என இயையும்.  விபுதர் - விசேஷபுத்திமான்கள்:
இதுபற்றி, தேவர்க்குத் தமிழில் 'புலவர்' என்று ஒரு பெயர்.  மகுடம் -
சிரசுக்குத் தானியாகுபெயரென்றாவது, கதிர்மகுடம் - வேற்றுமைத்தொகை
யன்மொழியென்றாவது கொள்க.  முருக்கிய - முருங்கிய என்பதன் பிறவினை;
முருங்குதல் - அழிதல்.  வேளென்னும் ஆண்பாற் சிறப்புப் பெயர்க்கு -
விரும்பப்படும் அழகுடையவனென்று காரணப்பொருள் கூறலாம்;
செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டதென்க.  அச்சொல் -
முன்னேவந்தஅடைமொழியால், காமவேளை விலக்கி நின்றது.     (256)

197.மின்சுடிகைப்புயகங்கள்வெருக்கொளும்வெங்கருடக்
                                   கொடியோன்,
வன்பதபற்பநகங்கொடெடுத்துயர்வண்ககனத்திடலான்,
முன்புவனத்திடைவந்துகவிக்கிறைமொய்ம்புணரப்புகல்போ,
தென்புமலைக்குறுபண்பையடுத்தனரெஞ்சியபப்பரரே.

     (இ -ள்.) மின் - (மாணிக்கத்தின்) ஒளி பொருந்திய, சுடிகை - உச்சிக்
கொண்டையையுடைய, புயகங்கள் - பாம்புகள், வெருகொளும் - அச்சங்
கொள்ளுதற்குக் காரணமான, வெம் கருடன் - வெவ்விய கருடப் பறவையின்
வடிவத்தை யெழுதிய, கொடியோன் - துவசத்தையுடைய கண்ணபிரான்,
பற்பம்பதம் வல் நகம் கொடு - தாமரைமலர் போன்ற திருவடிகளின் வலிய
நகத்தினால், எடுத்து - தூக்கி, உயர் வள் ககனத்து இடலால் - உயர்ந்த
பெரியஆகாயத்திலே வீசியெறிதலால், எஞ்சிய பப்பரர் - அழிந்த பப்பர
நாட்டுவீரர்கள், முன்பு - முன்னே [ஸ்ரீராமாவதார காலத்திலே], வனத்திடை
வந்து -தண்ட