பக்கம் எண் :

270பாரதம்உத்தியோக பருவம்

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றவையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.                      (298)

239.-கர்ணன் உள்ளேவந்தஇந்திரனை வணங்கி உபசரித்தல்.

அடுத்ததானமும்பரிசிலுமிரவலர்க்கருளுடன் முற்பகலளவுங்,
கொடுத்துநாயகன் புகுந்தனனாளைநீர்குறுகுமினென்றவன்கோயிற்,
றடுத்தவாயிலோர்மீளவுமுணர்த்தலிற்றலைவனுந்தருகென
                                          விரைவின்,
விடுத்தநான்மறை முனியைமுன் காண்டலும் வேந்தனுந்
                                 தொழுதடிவீழ்ந்தான்.

     (இ -ள்.) (இங்ஙனம் இந்திரன் பெருங்கிழவனாய்
மிகமெதுவாகச்சிரமப்பட்டுச் சென்று சேர்கையில் காலதாமதப்பட்டதனால்),
'இரவலர்க்கு - யாசகர்களுக்கு, அடுத்த தானமும் - செய்தற்கு உரிய
தானங்களையும், பரிசிலும் - வெகுமானங்களையும், அருளுடன் -
கருணையுடனே, முன் பகல் அளவும் - பகலின் முற்பொழுது கழியும்
வரையிலும், கொடுத்து -, நாயகன் - எங்கள் தலைவனான கர்ணன்,
புகுந்தனன் - உள்ளே சென்றுவிட்டான்; (ஆதலால்), நாளை நீர் குறுகுமின்-
நாளைக்கு நீர் வாரும்,' என்று - என்று சொல்லி, தடுத்த - (முதலில்)
தடைகூறின, அவன் கோயில் வாயிலோர் - அக்கன்னனது அரண்மனையின்
வாசற்காவலாளர்கள், மீளவும் - மறுபடி சென்று, உணர்த்தலின் - (இந்த
விருத்த வேதியனது வருகையைக் கன்னனுக்குத்) தெரிவித்ததனால்,
தலைவனும்- எசமானனான கர்ணனும், தருக என - (அவரை உள்ளே) வர
விடுங்களென்றுசொல்ல, விரைவின் விடுத்த - துரிதமாக உள்ளே யழைத்து
வந்துவிடப்பட்ட, நால்மறை முனியை - நான்கு வேதங்களும் வல்ல
அம்முனிவனை, முன் காண்டலும் - எதிரிற் பார்த்தவளவிலே, வேந்தனும் -
கர்ணமகாராஜனும், தொழுது - கைகூப்பி அஞ்சலிசெய்து, அடி வீழ்ந்தான் -
(அவனது) திருவடிகளில் வீழ்ந்து (சாஷ்டாங்கமாக) நமஸ்கரித்தான்; (எ - று.)

    தடுத்தவாயிலோர் மீளவும் உணர்த்துதற்குக் காரணம், இவனது மூப்பின்
முதிர்ச்சியை நோக்கி யெழுந்த இரக்கம்.  நீர் குறுகுமின் - சிறப்புப்பன்மை.
முற்பகல் - பின்முன்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை;
இலக்கணப்போலி யெனப்படும்.  முற்பகல் - பகலின் முன்பாதி.
முன்றிலினிடத்திலிருந்து கொடுத்தல் இயல்பாதலால், 'கொடுத்துப்
புகுந்தனன்'என்றார்.                                     (299)

240.-'நீ விரும்பியவற்றைக்கொடுப்பேன்' என்று கர்ணன்
இந்திரனுக்குக் கூறுதல்.

என்னமாதவம் புரிந்தனன் பரிந்துநீ ரீண்டெழுந்தருளுதற் கென்று,
பொன்னினாசனத் திருத்திமெய் யருளுடன் பூசையுமுறை
                                           முறைபுரிய,
அன்னவேதியன் றளர்ந்தவென்னடையினாலானதே பிற்பக