பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 277

     முன்னேஇராமாவதாரத்தில் சூரியகுமாரனான சுக்கிரீவன் பக்கத்திற்
சேர்ந்து இந்திர புத்திரனான வாலியை வதைத்ததற்குப் பிரதியாக இவ்
வவதாரத்தில் இந்திரகுமாரனான அருச்சுனன்பக்கல் சேர்ந்து சூரியபுத்திரனான
கர்ணனை அழித்தருளுகின்றான்போலும், தெரிவை - இங்கே பெண்ணென்னும்
மாத்திரமாய்நின்றது;  அப்பருவத்துக்கு வயதெல்லை - இருபத்தாறு முதல்
முப்பத்தொன்றளவும்.  தேசு - கிரணம்; அதனையுடையவன், தேசவன்.
சேயிழை யென்பதற்குச் சிவந்த [செம்பொன்னாலாகிய]
ஆபரணங்களையுடையவளென்று பொருள்; பண்புத்தொகை யன்மொழி;
செம்மை இழையெனப் பிரிக்க.  இழை - இரத்தினங்களை யிழைத்துச்
செய்வதென ஆபரணமாம்; இனி, இழையென்னும் நூலின்பெயர் சினையாகு
பெயராய், ஆடையையுணர்த்துவ தென்றுங் கொள்ளலாம்.           (307)

248.-தனது மாளிகைக்கு வந்தகுந்திதேவியைக் கர்ணன்
எதிர்கொண்டு சென்று உபசரித்தல்.

வந்துகுந்திநின்கோயிலெய்தினளெனவாயிலோருரைத்திட
                                     மைந்தன்,
முந்துமன்புடன்றொழுதெதிர் கொண்டுநன்முறைமையாலாசனத்
                                      திருத்தி,
யிந்துவின்கதிர்கண்டுமேன்மேலுமுற்றிரங்கிவான்கரைகடந்
                                      தேறுஞ்,
சிந்துவெண்டிரைச்சிந்துவொத்துருகுந் தெரிவையோடுரை
                                   சிலசெப்பும்.

     (இ -ள்.) (இங்ஙனம் குந்தி கர்ணன்வீட்டுக்கு நடந்து சென்றதும்),
குந்திவந்து நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட -
குந்திதேவிவந்து உனது சிறந்த அரண்மனையை அடைந்தாளென்று வாயில்
காவலாளர்சொல்ல, மைந்தன் - புத்திரனாகிய கர்ணன், முந்தும் அன்புடன்
மிகுந்தஅன்புடனே, எதிர்கொண்டு - எதிர்கொண்டுவந்து, தொழுது -
வணங்கி,நல்முறைமையால் - (சாஸ்திரங்களில் தாய்க்குச் செய்யும்படி
சொன்ன) நல்லஉபசார முறைதவறாமல், ஆசனத்து இருத்தி - (சிறந்ததோர்)
ஆசனத்திலேவீற்றிருக்கச்செய்து, இந்துவின் கதிர் கண்டு மேல் மேலும் உற்று
இரங்கி வான்கரை கடந்து ஏறும் சிந்து வெள் திரை சிந்து ஒத்து உருகும்
தெரிவையோடு -சந்திரனது கிரணத்தைப் பார்த்து (மிகமகிழ்ந்து) மேலே
மேலே பொங்கிஒலித்துப் பெரிய கரையைக் கடந்து மீதெழுகிற வீசுகிற
வெண்மையானஅலைகளையுடைய கடலைப்போன்று மனம் மிக மகிழ்கிற
அக்குந்தியுடனே,சில உரை செப்பும் - சிலவார்த்தைகளைக் கூறுவான்;(எ-று.)

    சந்திரனைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவது பிரசித்தம்.
சூரியபுத்திரனான கர்ணனுக்குச் சந்திரனையும், அவனது தாய்க்குச்
சந்திரனுக்குஉற்பத்தி ஸ்தானமான கடலையும் உவமை கூறினார்.  இந்து -
வடசொல்.  நான்காமடியிலுள்ள சிந்துவென்னுஞ்சொல் இரண்டனுள், முன்னது
- தமிழ்வினைப் பகுதி; பின்னது - ஸிந்துவென்னும் வடமொழிப்பெயர். (308)