மிக்கஅன்பினால், இப்பொழுது தனங்களிற் பால் சுரந்தது. "அன்றன்போ டெடுத்தணைத்து முலைக்கணூற லமுதூட்டி,' என்பர் மேற்கன்னபருவத்தும். மோயினள் - முற்றெச்சம்; "மோயினளுயிர்த்தகாலை"என்றார் பிறரும். மோ - பகுதி, ய் - எழுத்துப்பேறு, இன் - இறந்தபாலஇடைநிலை, அள் - பெண்பால்விகுதி. உடம்பில் மயிர் சிலிர்த்தல், அன்பின்மெய்ப்பாடு. ஆதரம், புளகம், பாக்யம் - வடசொற்கள். பாக்கியம் -அதிருஷ்டம்; நல்லூழ்ப்பேறு. இறுகுற - அழுந்த. 'பால்சுரந்தாள்' என்றும்பாடம். (312) 253. | வருகவென்மதலாயிளைஞரைவருநின் மலரடியன்பினால் வணங்கி, யுரிமையான்மனமொத்தேவலேபுரியவொருதனிச்செய்ய கோலோச்சி, யரசெலாம்வந்துன்கடைத்தலைவணங்க வாண்மையுஞ்செல்வமும் விளங்கக், குருகுலாதிபர்க்குங்குரிசிலாய்வாழ்வு கூர்வதே கடனெனக் குறித்தாள். |
(இ -ள்.) (பின்பு குந்தி கர்ணனைப்பார்த்து), 'என் மதலாய் - எனது புத்திரனே! வருக - (என்னுடன்) வருவாயாக; இளைஞர் ஐவரும் - (பாண்டவர்களாகிய உன்) தம்பியரைந்துபேரும், நின்மலர் அடி அன்பினால் வணங்கி - உனது தாமரை மலர்போலும் பாதங்களை அன்பால் நமஸ்கரித்து, உரிமையால் - க்ஷத்திரியதரும முறைப்படி, மனம் ஒத்து ஏவலே புரிய - மனம்ஒருமித்து (நீயேவின) சிறுகுற்றேவல் தொழில்களையே செய்ய, ஒருதனி -ஒப்பற்ற தனியாய், செய்ய கோல் ஓச்சி - (நீ) செங்கோலை நடத்தி, அரசுஎலாம் வந்து உன் கடைத்தலை வணங்க - அரசர்களெல்லாரும் வந்து உனதுவாயிற்புறத்தில் நின்று வணங்கவும், ஆண்மையும் செல்வமும் விளங்க -வீரமும் செல்வமும் விளங்கவும், குருகுல அதிபர்க்கும் குரிசில் ஆய் -குருகுலத்து அரசர்கட்கெல்லாம் அரசனாய், வாழ்வு கூர்வதே - வாழ்க்கை மிகவேண்டுவதே, கடன் - (நீ செய்தற்கு உரிய) கடமை,' என - என்று, குறித்தாள்- குறிப்பிட்டுக் கூறினாள்; (எ - று.) மதலாய் - மதலையென்பது ஈறுதிரிந்த விளி. ஏவலே - புரிய - அரசுபுரியாம லென்றபடி. ஒருதனி - தன்னந்தனியே. தலைக்கடை - கடைத்தலை; இலக்கணப்போலி. (313) 254.-இதுவும் மேற்கவியும்ஒருதொடர்: அதுகேட்டுக் கர்ணன் குந்தியை நோக்கிக் கூறுவன. பெற்றநீர்மகவன்பிலாமையோவன்றிப்பெரும்பழிநாணியோவிடுத்தீர், அற்றைநாட்டொடங்கி யென்னையின்றளவு மாருயிர்த்துணை யெனக்கருதிக், கொற்றமாமகுடம்புனைந்தரசளித்துக் கூடவுண்டுரியதம்பியருஞ், சுற்றமானவருமென்னடிவணங்கத்தோற்றமுமேற்றமுமளித்தான். |
(இ -ள்.) பெற்ற நீர் - (என்னை) ஈன்ற நீர், மகவு அன்பு இலாமையோ - புத்திரவாற்சலிய மில்லாமையினாலோ? அன்றி அல்லது, பெரு பழி நாணியோ - பெரியலோகாபவாதத்துக்கு வெட்கப்பட்டோ? விடுத்தீர் - (என்னை) விட்டுவிட்டீர்; அற்றை நாள் தொடங்கி - அன் |