பின்னேதொடர்ந்துவருகிற அரசர்களையும் ஒருவரொருவராக நிற்கச் செய்து, பண் அமை தட தேர் மீது கொண்டு - அலங்காரம் அமைந்த பெரிய தனது தேரின்மே லேறிக்கொண்டு, அன்றே பாண்டவர் உறைநகர் அடைந்தான் - அப்பொழுதே புறப்பட்டுப் பாண்டவர்கள் வசிக்கிற (உபப்பிலாவிய) நகரத்தைச்சேர்ந்தான்; (எ - று.) (323) 264.-கண்ணன் நடந்தவற்றைப்பாண்டவர்க்கு உரைத்தல். தூதுபோயரவத்துவசனோடுறுதிசொன்னது மறுத்தவன்சினந்து, மோதுபோர்புரியத்துணிந்ததும்விதுரன் மூரிவில்லிறுத்ததுங்கங்குற், போதுபோர்வஞ்சம் விளைத்ததுங்கன்னன் புரந்தரற்கீந்ததும் பயந்த, மாதுபோய்வரங்கள்பெற்றவையொழியமற்றெலாமைத்துனர்க் குரைத்தான். |
(இ -ள்.) தூது போய் - (தான்) தூதுசென்று, அரவம் துவசனோடு - துரியோதனனுடனே, உறுதி சொன்னதும் - நன்மைதருவதான சமாதான வார்த்தையைக் கூறியதையும், அவன் - அத்துரியோதனன், மறுத்து - (அதனைஉடன்படாது) தடுத்து, சினந்து - கோபித்து, மோது போர் புரிய துணிந்ததும் -தாக்குகின்ற யுத்தத்தைச் செய்ய நிச்சயித்ததையும், விதுரன் -, மூரிவில்இறுத்ததும் - வலிமையையுடைய [அல்லது பழைய] தனது வில்லை யொடித்துப்போகட்டுவிட்டதையும், கங்குல் போது - இராக்காலத்தில், (ஆலோசித்துத்துரியோதனன்), வஞ்சம் போர் விளைத்ததும் - வஞ்சனையான யுத்தத்தை(நிலவறையில்) அமைத்துவைத்ததையும், கன்னன் -, புரந்தரற்கு ஈந்ததும் -இந்திரனுக்குக் (கவசகுண்டலங்களைக்) கொடுத்ததையும், பயந்த மாது போய்வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் - பெற்றதாயான குந்தி சென்று(கர்ணனிடத்து) வரங்கள் பெற்றவற்றைத் தவிர மற்றுமுள்ள எல்லாச்செய்திகளையும், மைத்துனர்க்கு உரைத்தான் - (ஸ்ரீகிருஷ்ணபகவான் தனது)மைத்துனர்களாகிய பாண்டவர்களுக்குக் கூறியருளினான்; (எ - று.) பயந்தமாது போய் வரங்கள் பெற்றவற்றைக் கூறாததற்குக் காரணம் கீழே விளக்கப்பட்டது. அத்தைமகனை மைத்துனனென்பது - முற்காலத்து வழக்கம்போலும். மற்றெலாம் என்றதில், அசுவத்தாமனைப் பேதித்தது அடங்கும். (324) கிருட்டிணன் தூதுசருக்கம் முற்றிற்று. ------- |