ஐந்தாவது படையெழுச்சிச் சருக்கம். பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருவரது சேனைகள் போரின் பொருட்டுத் தனித்தனி திரண்டெழுந்துநின்ற செய்தியைக் கூறுகின்றதொரு நூற்கூறுபாடென்பது பொருள். படையெழுச்சி என்பது - படை எழுதல் என எழுவாய்த்தொடராகவாயினும், படையினது எழுதல் என ஆறாம்வேற்றுமைத் தொகைநிலைத் தொடராகவாயினுங் கொள்ளத்தக்கது. எழுச்சிச் சருக்கம் - எழுச்சியைக் கூறுஞ்சருக்கமென இரண்டனுருபும்பயனும் உடன்தொக்கதொகை; இனி, எழுச்சியினது சம்பந்தமான சருக்கமென விரித்து, ஆறாம் வேற்றுமைத்தொகை யென்றுங் கொள்ளலாம். படை - (பகைவரைப்) படுத்தற்குக்கருவியானது எனக் காரணப்பெயர்; படு - பகுதி: படுத்தல் - அழித்தல்: ஐ - கருவிப்பொருளீறு. எழுச்சி - தொழிற்பெயர். சி - விகுதி. இச்சருக்கத்தில் முதற்பதின்மூன்று பாடல்கள் - கண்ணன் தூதுசென்று வந்தவுடனே தருமபுத்திரன் பகை முடித்தற்பொருட்டுச் சேனைதிரட்டின செய்கையையும், பின் பதினொரு பாடல்கள் அங்ஙனமே துரியோதனன் சேனைதிரட்டின வரலாற்றையுங் கூறுதல் காண்க. 1.-கடவுள் வணக்கம். படர்ந்தகானகந்திரிந்துமீண்டன்புடன்பணிந்தபஞ்சவர்க்காகக் கடந்தஞானியர் கடவுளர் காண்கலாக் கழலிணைசிவப்பேறத் தொடர்ந்தநான்மறைபின்செலப்பன்னகதுவசன் மாநகர்த்தூது நடந்தநாயகன்கருமுகில்வண்ணமென்னயனம்விட்டகலாதே. |
(இ -ள்.) படர்ந்த - பரவியுள்ள, கான் அகம் - காட்டினிடத்திலே, திரிந்து - (பலவருஷகாலம்) அலைந்து, மீண்டு - திரும்பிவந்து, அன்புடன் பணிந்த - அன்போடு (தன்னை) வணங்கின, பஞ்சவர்க்கு ஆக - பஞ்சபாண்டவர்கள் பொருட்டு,-கடந்த ஞானியர் - (இவ்வுலகப்பற்றுக்களை) வென்ற தத்துவஞானமுள்ள முனிவர்களும், கடவுளர் - தேவர்களும், காண்கலா- (உள்ளபடி) காணவொண்ணாத, கழல் இணை - (தனது) திருவடிகளிரண்டும்,சிவப்பு ஏற - செந்நிறம் மிகப்பெறவும்,-தொடர்ந்த - (தன்னைத்)தேடுந்தன்மையுள்ள, நால் மறை - நான்கு வேதங்களும், பின் செல -(காணமாட்டாமல்) விடாது தன் பின்னேவரவும்,-பன்னக துவசன் மாநகர் -பாம்புக்கொடியையுடைய துரியோதனனது பெரிய அஸ்தினாபுரியிலே,தூதுநடந்த - தூதனாய் நடந்து சென்ற, நாயகன் - (எல்லாவுயிர்க்குந்)தலைவனான கண்ணபிரானது, கருமுகில் வண்ணம் - கரிய மேகம்போன்றதிருமேனிநிறம், என் நயனம் விட்டு அகலாது - (எப்பொழுதும்) எனதுகண்களைவிட்டு நீங்காது; (எ - று.) - ஏகாரம் - தேற்றம்; ஈற்றசை யெனினும்அமையும். |