பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 29

அம்சாவதாரமானரகுராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்டதென்றும்,
பரசுராமனிடம் ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி அங்ஙனம் நீங்கினபின்பு
அவன் வீடுமனிடந் தோல்வி யடைந்தன னென்றும் உண்மையுணர்க.  'நீ கற்ற
வெம்சரத்தின் வென்றமையல்லால்' என்றது, நீ அவனிடம்
கல்விபயிலாமலிருந்தால் அவனை வென்றிருக்க மாட்டா யென்பது தோன்ற
நின்றது.                                  (17)

இதுமுதல் மூன்றுகவிகள் - குளகம்:அவற்றுள் முதலிரண்டு
கவிகள் - வீடுமன் வெகுண்டு கர்ணனைப் பரிகசித்துச்
சொல்லும் உத்தரம்.

18.

தூமவெங்கனற்றோன்றியதோகையந்தொடையல்சூட்டியநாளில்
நாமவெஞ்சிலைநாணெடுத்தனையடாநரனொடும்போர்செய்தாய்
தாமவெண்குடைநிருபனையந்தரசரிதர்கொண்டேகாமல்
வீமன்வெஞ்சிறைமீட்டநாளினுந்திறல்வினைபுரிமுனைவென்றாய்.

     (இ -ள்.) அடா - கர்ணா! தூமம் - புகையையுடைய, வெம் -
வெப்பத்தையுடைய, கனல் - அக்கினியிலே, தோன்றிய - பிறந்த, தோகை -
மயில்போன்ற சாயலையுடைய திரௌபதி, அம் தொடையல் - அழகிய
மணமாலையை, சூட்டிய நாளில் - (அருச்சுனனுக்கு) இட்டகாலத்தில், நாம
வெம்சிலை நாண் எடுத்தனை - அச்சத்தைத் தருகிற கொடிய வில்லில்
நாணியை யேற்றி, நரனொடும் போர் செய்தாய் - அருச்சுனனுடனே
யுத்தம்பண்ணி வென்றாய்! (அன்றியும்), தாமம் - ஒளியையுடைய, வெள்குடை -
வெண்கொற்றக்குடையையுடைய, நிருபனை - துரியோதனராசனை, அந்தர
சரிதர் - ஆகாயத்திற் சஞ்சரித்தலையுடைய (சித்திரசேனன் முதலிய)
கந்தருவர்கள், கொண்டு ஏகாமல் - கட்டித் தூக்கிக்கொண்டு செல்லாதபடி,
வீமன் - வீமசேனன், வெம் சிறை மீட்ட நாளினும் - பயங்கரமான
காவலினின்று விடுவித்த காலத்திலும், திறல் வினை புரி முனைவென்றாய் -
வலிமையையுடைய போர்த்தொழிலைச் செய்யுமிடமான யுத்தகளத்தில்
(அவனைச்) சயித்திட்டாய்! (எ - று.)

     போர்செய்தாய், முனை வென்றாய் என்றவற்றில், அக்காலங்களில்
யாதொன்றுஞ் செய்யமுடியாது தோற்று ஓடிப்போனாயே? இப்பொழுது வீண்
வீரவாதஞ் செய்வதிற் பயனென்ன? என்னும் பொருள் தொனிக்கும்.
போர்செய்தாய், வென்றாய் என்பன - பிற குறிப்பின்பாற்படும்;
இகழ்ச்சிக்குறிப்பு; எதிர்மறையிலக்கணையுமாம்.  திரௌபதியின் கலியாண
காலத்தில் பிறரால் அறுத்தற்கு முடியாத மத்ஸ்யயந்திரத்தை அருச்சுனன்
அறுத்திட்டு அவளால் மாலை சூட்டப்பட்டது காரணமாக அழுக்காறுகொண்டு
துரியோதனாதியரும் கர்ணனும் மற்றும் பல அரசர்களோடு எதிர்த்துப்போர்
செய்து அருச்சுனனாலும் வீமனாலும் வென்று அடித்துத் துரத்தப்பட்டு
ஓடினார்களென்பது பிரசித்தம்.  "புகைத்தகனல்விழிகன்னன் தருக்கா லெள்ளிப்
பூசுரனென்றவமதித்துப் புனைவில்வாங்கி, உதைத்த பகழியுமுகைத்தா னுரனுந்
தன்கை யொரு கணையாலுடல் பிளந்தானுருமேறொப்பான்" எனக் கீழ்த்
திரௌபதி மாலை