பக்கம் எண் :

302பாரதம்உத்தியோக பருவம்

வீரர்கள் தமது வீரத்துக்கு ஓர்அறிகுறியாகக் காலில் அணிவதோர்
ஆபரணம்; 'வீரத்தின் வீக்கிய, கழலேயாடவர் கான்மிசை யணி வடம்,"
என்பதனாலும்அறிக.  மின் - மின்னல் போல மெல்லியளாய் விளங்கும்
பெண்ணுக்குஉவமையாகுபெயர்.  மின்னுவது, மின் எனக் காரணக்குறி.
முரசறைந்துஎன்பதற்கு, தருமன் - ஏவுதற்கருத்தா; முரசறைவித்து
என்க.                                              (336)

13.-கவிக்கூற்று.

பாண்டுவின்றிருமைந்தர்களைவரும்பார்த்திவருடன்கூடி
யீண்டிருந்தனரிவ்வுழிச்செருக்குறித்தெழிலிமேனியனோடுந்
தூண்டுவெம்பரித்தேர்த்துரியோதனன்றூதுபோய்ப்பரந்தாமன்
மீண்டுவந்தபின்னவ்வுழிப்புரிந்தனவிளம்புகின்றனமன்னோ.

     (இ - ள்.) பாண்டுவின் திருமைந்தர்கள் ஐவரும் - பாண்டு
மகாராசனதுசிறந்த குமாரர்களான (தருமன் முதலியோர்) ஐந்து பேரும்,
பார்த்திவருடன்கூடி - மற்றையரசர்களுடனே சேர்ந்து, செரு குறித்து -
போர்செய்யவிருப்பதை வெளிப்படுத்தி, எழிலி மேனியனோடும் -
மேகம்போலக் கரியதிருமேனியையுடைய கண்ணபிரானுடனே, இ உழி -
இவ்விடத்தில்[உபப்பிலாவியத்தில்], ஈண்டு இருந்தனர் - இவ்வாறு
இருந்தார்கள்; (இது நிற்க),அ உழி - அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்],
தூண்டும் வெம்பரிதேர்துரியோதனன் - செலுத்தப்படுங் கொடியகுதிரைகள்
பூட்டுந் தேரையுடையதுரியோதனராசன், பரந்தாமன் தூது போய் மீண்டு
வந்த பின் - கண்ணபிரான்தூதுசென்று திரும்பிவந்த பின்பு, புரிந்தன -
செய்தகாரியங்களை,விளம்புகின்றனம் - (இனிச்) சொல்லத்
தொடங்குகிறோம்; (எ - று.)

    அரசாட்சிச்செல்வம் இவர்களை நணுகஇருத்தல்பற்றியும், 'திரு
மைந்தர்கள்' என்றார் போலும்.  மைந்து - வலிமை, இளமை, அழகு;
அதனையுடையவர் - மைந்தர்.   எழிலி - எழுதலையுடையதென 
மேகத்துக்குஏதுப்பெயர்.  தேர் - மற்றை அங்கங்களுக்கும் உபலட்சணம்.
பரந்தாமன் -(எல்லாவுலகத்திலும்) மேலான இடத்தை [பரமபதத்தை]
யுடையவன்; சிறந்தசோதிவடிவானவ னென்றும் பொருள் கொள்ளலாம்.
தாமம் - இடமும்,ஒளியுமாம்.  துரியோதனன் என்பதற்கு - (பகைவர்க்குக்)
கொடியபோரையுடையா னென்று பொருள்; யோதநம் - யுத்தம்.  (337)

வேறு.

14.-தனக்குப் போர்த்துணையாகும்படி துரியோதனன்
எல்லாவரசர்க்கும் செய்தி தெரிவித்தல்.

முந்தரவுயர்த்தோனோலைமுடியுடையரசர்காண்க
வெந்திறலைவரோடும்வெஞ்சமர்விளைந்ததம்மா
தந்தமகிளைஞரோடுஞ்சாதுரங்கத்தினோடும்
வந்தவர் தமக்கேவாழ்வுமுழுதுமென்றெழுதிவிட்டான்.