ஆறாவது முகூர்த்தங் கேள்விச்சருக்கம். [துரியோதனன் தனக்குவெற்றியுண்டாகுமாறு போர்க்களத்துக்கு உரியதெய்வத்துக்குப் பலிசெலுத்துவதற்கு] நல்லதொரு வேளையைக் குறித்துத் தரும்படி (பாண்டவருள் இளையவனான சகதேவனைக்) கேட்ட செய்தியைக் கூறும் பாகம். முகூர்த்தம் - பொழுதென்று பொருள்; இரண்டு நாழிகை [நாற்பத்தெட்டு நிமிஷங்] கொண்ட காலத்துக்கு முகூர்த்தமென்று பெயர். கேள்வி - கேட்டல்; தொழிற்பெயர்; வி - விகுதி. 1 - கடவுள் வணக்கம். கயம்படுமனத்தனாயகண்ணிலாவரசன்மைந்தன் வயம்படநினைந்துகங்குல்வகுத்ததோர்சூழ்ச்சிதன்னாற் பயம்படுமல்லரோடுபாதலமடியநீண்ட சயம்படுகமலத்தாளென்றலைமிசையகல்கிலாவே. |
(இ - ள்.) கயம்படு மனத்தன் ஆய -கீழ்மை பொருந்தின மனத்தையுடையவனான, கண் இலா அரசன் மைந்தன் - பிறவிக்குருடனான திருதராட்டிர மகாராசனது குமாரனான துரியோதனன், வயம் பட நினைந்து - (தனக்கு) வெற்றியுண்டாகுமாறு ஆலோசித்து, கங்குல் வகுத்தது - இராத்திரி காலத்திலே அமைத்து வைத்ததான, ஓர் சூழ்ச்சிதன்னால் - ஒரு தந்திரத்தினால், பயம்பு அடு மல்லரோடு பாதலம் மடிய நீண்ட - பெருங்குழியிலே பொருந்தின மல்லர்களுடனே பாதாளலோகத்தவரும் அழியும்படி நெடிதாக வளர்ந்த, சயம் படு கமலம் தாள் - வெற்றி பொருந்திய செந்தாமரை மலர் போன்ற (ஸ்ரீ கண்ணபிரானது) திருவடிகள், என் தலைமிசை - அகல் கிலா - எனது சிரத்தின்மேல் (எப்போதும்) நீங்கமாட்டா; (எ - று.)- ஏ - தேற்றம்; ஈற்றசையுமாம். "கோளில் பொறியிற் குணமிலவேயெண்குணத்தான், தாளை வணங்காத்தலை" என்றபடி, எம்பெருமான் திருவடிகளை வணங்குபவரே தலைபடைத்தபயன் பெறுபவராதலால், இவ்வாறு கூறினார். தா ளென் தலைமிசை யகல்கிலா- எப்பொழுதுந் திருவடிகள் அடியேனது முடியின்மீதுபடும்படி சாஷ்டாங்கமாகவிழுந்து நமஸ்கரிப்பேன் என்றதாம். விசித்திரவீரியன் மனைவியருள்ஒருத்தியான அம்பிகை கணவனை யிழந்தபின் சந்ததி விருத்தியின் பொருட்டுமாமியார் கட்டளைப்படி மைத்துனனான வியாசமா முனிவனோடு சேருகையில்கூச்சத்தாற் கண் விழியாதிருந்ததனால், அவளிடம் திருதராட்டிரன் பிறவிக்குருடனாகப் பிறந்தான். 'கயம்படுமனத்தனாய' என்ற அடைமொழி -கண்ணிலா வரசனுக்கும், அவன் மைந்தனுக்கும் இயையும். 'கண்ணிலாவரசன் மைந்தன்' என்ற சொற்போக்கு தந்தை ஊனக்கண் குருடன், மைந்தன் ஞானக்கண் குருடன் என்ற |