இழிவைத் தொனிப்பிக்கும். 'கயமையாவது -நற்குணங்கள் யாவுமிலராய கீழோரது தன்மை,' என்றார், பரிமேலழகர். இனி, கய படு எனப் பிரித்து, பெருமை யொழிந்த என்றாவது, மென்மை நீங்கின என்றாவது பொருள் கொள்ளினும் அமையும்; "தடவுங் கயவு நளியும் பெருமை', "கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்" என்பன - தொல்காப்பியம். பயம்படு - பயம் + படு; பயனற்ற என்றும், அச்சமொழிந்த என்றும், அச்சமுற்ற என்றும், அச்சந்தருகிற என்றும் உரைப்பினும் அமையும். வயம் பட - (கண்ணன்) தன் வசப்பட வென்றலுமாம். மல்லர் - ஆயுதமில்லாமலே கைகால் முதலிய உறுப்புக்களைக்கொண்டு போர்புரியும் மல்லுத் தொழிலில் வல்லவர். (349) 2.-இதுவும் அடுத்தகவியும் - வீடுமன் துரியோதனனை நோக்கிக் களப்பலிக்கு நிர்ணயம் செய்தல். அளப்பிலாச்சேனைநாதனடிபணிந்தவனிவேந்தன் களப்பலிக்குரியார்யாவர்கடவநாள்யாவதென்னத் தளப்பிலாமுகூர்த்தம்வல்லோன்சாதேவனல்லதில்லை யுளப்பொலிவுடையாயின்றேயுற்றவற்கேண்மினென்றான். |
(இ - ள்.) அவனி வேந்தன் -பூமியையாளும் அரசனான துரியோதனன், (பின்பு), அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து - அளவிடுதல் கூடாத (தனது) சேனைகளுக்கெல்லாந் தலைவனான வீடுமனது பாதங்களை வணங்கி, 'களப்பலிக்கு உரியார் யாவர் - போர்க்களத்தில் (போர்தொடங்குதற்குமுன் நம்மால்) பலிகொடுக்கப்படுதற்குத் தகுந்தவர் எவர்? கடவ நாள் யாவது - அதற்கு ஏற்றநாள் எது?' என்ன - என்று கேட்க,- (அவ்வீடுமன்), தளப்பு இலாமுகூர்த்தம் வல்லோன் - (பயன்) தவறுத லில்லாத நல்முகூர்த்தத்தை அமைக்கவல்லவன், சாதேவன் அல்லது இல்லை - சகதேவனேயன்றி வேறொருவருமில்லை,' (ஆதலால், உளம் பொலிவு உடையாய் - மனவெழுச்சியையுடையவனே! இன்றே உற்று - இப்பொழுதே (அவனிடம்) போய், அவன் கேண்மின் - அவனை (நீங்கள்) கேளுங்கள்', என்றான் - என்று கூறினான்; (எ - று.) சிறந்ததொரு முகூர்த்தத்திற் சிறந்தஒருவீரனைப் போர்க்களத்திற்குரிய தேவதைக்கு முன்னர்ப் பலிகொடுப்பவர், தவறாமல் வெற்றி பெறுவர் என்றல் மரபு. 'நாள் செய்வது நல்லோருஞ் செய்யார்' என்றபடி சிறந்த நேரத்தில் தொடங்கின காரியம் தவறாது பயன்தருதலால், 'தளப்பிலா முகூர்த்தம் என்றது,தளம்பல் - நிலைகலங்குதல். உளப்பொலிவு உடையாய் - மனவெழுச்சிகெடாதவனே! என்றுமாம். அவன் தங்கள் பக்கத்துக்காக நல்ல நாள்அமைத்தற்குமுன்னமே சென்று கேட்டல் வேண்டுமென்பார், 'இன்றே' என்றான்; ஏகாரம் - தேற்றவகையால் விரைவு குறிக்கும். அவற் கேண்மின் - உயர்திணையில் ஐயுருபு தொக்கது; இரண்டாம் வேற்றுமைச் சிறப்புவிதியால் உயர்திணைப்பெயரீறு திரிந்தது. 'கேண்மின்' என ஏவற்பன்மையாற் கூறினது. துச்சாதனன் கர்ணன் |