பக்கம் எண் :

326பாரதம்உத்தியோக பருவம்

அதர்வணவேதத்தின் ஒரு பகுதிபோலும்.  "அருகு நடிப்பன அலகைகள்
பாடுவ யாமள வாரணமே" என்பர் மேற்பதினாறாம் போர்ச் சருக்கத்தும்.
ஆண்டகை - பண்புத்தொகையன்மொழி.  கன்னி-கந்யா என்பதன் திரிபு;
இளமகளென்று பொருள்.  பகடு - யானை எருமை பசு இவற்றின்
ஆண்பாற்பெயர்.  ஈங்கு, எருமைக் கடா என்னலுமாம்.  'ஈர்ந்து' என்றும்
பாடம்.                                                    (361)

களப்பலியூட்டு சருக்கம் முற்றிற்று.

----------

எட்டாவது

அணிவகுப்புச் சருக்கம்.

   பாண்டவருந் துரியோதனாதியருந் தத்தஞ்சேனைகளைப்பகுத்து
ஒழுங்குப்படுத்திப் போருக்குச் சித்தஞ்செய்யுஞ் செய்தியைக் கூறும் பாகம்.
அணி - வரிசை.  வகுப்பு - வகுத்தல்.  தொழிற்பெயர்: பு - விகுதி.
இச்சருக்கத்தில், முதற்பதினாறு கவிகள்-பாண்டவர் அணி வகுத்தலையும்,
பின்பதினெட்டுக் கவிகள் துரியோதனாதியர் அணி வகுத்தலையும் கூறும்.

   இந்தச் சருக்கத்திற் கடவுள் வாழ்த்துச் செய்யுள் காணப்படவில்லை;
மாநஸிகமாத்திரமாகக் கடவுள்வணக்கம் நிகழ்ந்துவிட்டதென்றாவது, கடவுள்
வாழ்த்தாக நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில்
ஏடெழுதுவோரால் எழுதாது விடப்பட்டு எஞ்சிய தென்றாவது, இச்சருக்கத்து
முதற்செய்யுளில் போருக்குச் செல்லவேண்டும் வகையைக் கண்ணன்
சுவேதனுக்குக் கூறினானென்பதுவே வஸ்துநிர்த்தேசரூபமான மங்களமாக
ஆசிரியராற் கருதப்பட்ட தென்றாவது கொள்க.

வேறு.

1.-கண்ணன் படையெடுத்துச்செல்லும்படி சுவேதனுக்குக்
கட்டளையிடுதல்.

மற்றைநாள்வசுதேவன்மாமகன்மண்டலீகருமன்னருஞ்
செற்றுநீடவைபுக்கிருந்தசிவேதனோடிவைசெப்பினான்
இற்றைநாளதிரதர்மகாரதர்சமரதாதியரெவரொடுங்
கொற்றவஞ்சிமிலைச்சியேகுககுருநிலத்திடையென்னவே.

    (இ - ள்.) மற்றை நாள் - மறுநாள் உதயத்திலே, வசுதேவன் மாமகன் -
வசுதேவனது சிறந்த குமாரனான கண்ணபிரான், மண்டலீகரும் மன்னரும்
செற்றும் நீடு அவை புக்கு - மண்டலாதிபதிகளான அரசர்களும் (மற்றும் பல
வகையான) அரசர்களும் நெருங்கியுள்ள பெரிய பாண்டவ சபையிற்சென்று,
இருந்த சிவேதனோடு - (அங்கு வந்து) வீற்றிருந்த (பாண்டவ
சேனாதிபதியான)சுவேதனுடனே,