பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 33

     (இ -ள்.) கங்கை மா மகன் - கங்காதேவியின் சிறந்த குமாரனான
வீடுமன், இவை இவைபுகலவும் - இந்த இந்த வார்த்தைகளைச் சொல்லவும்,
(சிறிதும் லக்ஷ்யஞ் செய்யாமல்), சர்ப்ப கேதனன் - பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், கன்னனை கசிந்து உள்கொண்டு - கர்ணன் வார்த்தையையே
விரும்பிக் கொண்டாடி, இருந்த அந்தணனையும் - (அங்குத் தூதனாய் வந்து)
வீற்றிருந்த உலூகமுனிவனையும், அம் கை கொட்டி நக்கு அவமதித்து -
அகங்கைகளைத் தட்டிச்சிரித்துப் (பரிகாசஞ் செய்து) அலக்ஷ்யம் பண்ணி, 'பார்
- இந்த ராச்சியம், எமதே - எங்களுடையதே; தங்கள் கான் அகம் -
பாண்டவர்கள் தாங்கள் இவ்வளவு காலம் வசித்திருந்த காட்டினிடம், தமது -
அவர்களுடையதேயாம், என - என்று, புகன்றனன் - சொன்னான்; (அதுகேட்டு
உடனே), அந்த பங்கயம் ஆசனம் முனிவனும் - திருமாலின் திருநாபித்
தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரம தேவனைப் போன்ற அவ்வுலூக
முனிவனும், மீண்டுபோய் - திரும்பி (உபப்பிலாவியத்துக்கு)ச் சென்று, அவை -
அங்கு நடந்த அவ்வரலாறுகளை, பாண்டவர்க்கு சொன்னான் -
பாண்டுகுமாரர்களுக்குச் சொல்லியருளினான்; (எ - று.)

    'இவையிவை' என்றது, கீழிரண்டு கவிகளிலுங் கூறியவற்றை, கசிந்து
உட்கொண்டு - அன்புகொண்டு அங்கீகரித்து என்றபடி.  அகம் + கை =
அங்கை: "அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்" என்னுஞ் சூத்திர
விதி.  இனி, அம் கை - அழகிய கை என்றுமாம்.  இராச்சியபாகம் வேண்டுகிற
பாண்டவரிடத்து உள்ள அலட்சியத்தையும் பரிகாசத்தையும் அவர்களுக்குத்
தூதனாய் வந்த உலூகன்மேற் காட்டினான் துரியோதனன்.  பங்கயம் -
சேற்றில் முளைப்பது என்று பொருள்:  காரணவிடுகுறிப்பெயர்;
பங்கயமென்னுங்கொடியின் பெயர், அதன் மலரைக் குறித்தலால்,
பொருளாகுபெயர்:  இதுபோல்வனவற்றை முதலுக்குஞ் சினைக்கும்
பொதுவென்பாரு முளர்.  உலூகனுக்குப் பிரமன் உவமை - தூய்மைக்கும்
சிறந்த அறிவுக்கும், எப்பொழுதும் வேதமோதுதற்கும், நல்லொழுக்கத்துக்கு
மென்க.  பங்கயாசன முனிவன் - உவமைத்தொகை.  இவையிவை என்ற
அடுக்கு, பன்மைப் பொருளது.  இனி, பங்கயாசன முனிவன் என்பதற்கு -
(யோகத்துக்குரிய அங்கங்கள் எட்டனுள் ஒருவகையிற் சேர்ந்த)
பதுமாசனத்தையுடைய  முனிவனென்றும் உரைக்கலாம்; பதுமாசனமாவது -
இருதொடையின் மேலும் இரண்டு உள்ளங்காலையும் மாறி மேல்தோன்ற
வைத்து உட்காரும் நிலை.                                      (20)

அருச்சுனனைத் தன்னிடம்வரும்படி கண்ணன் உலூகனிடம்
செய்தி கூறியனுப்புதல்.

21.

ஆங்கவர்க்கிவனவணிகழ்ந்தனவெலாமருந்தகையுடன்சொல்லி
யீங்குவந்தெழில்யாதவற்கியம்பலும்யாதவன்மகிழ்வுற்று
வாங்குவெஞ்சிலைவிசயனைவிரைவினில்வரவிடுகெனமீள
வோங்குமாதவவுலூகனைப்போக்கினானவனும்வந்துரைசெய்தான்.