பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 339

     (இ-ள்.) பிடர் வலி கட கரிகளின் - பிடரியில் வலிமையுள்ள
மதத்தையுடைய ஆண் யானைகளாலும், செறி பிடிகளின் - நெருங்கின
பெண்யானைகளாலும், புனை முடிகளின் - (அவரவர்) அணிந்துள்ள
கிரீடங்களாலும்,படர் நிழல் கவிகையின் - பரந்த நிழலையுடைய
குடைகளாலும், மிசை துகள்பரவி மொய்த்து எழு புரவியின் - ஆகாயத்திலே
தூளிகள் பரவுவதற்குக்காரணமாய் நெருங்கி வருகிற குதிரைகளாலும், சுடர்
விதம் படைகளின் -விளங்குகிற பலவகைப்பட்ட ஆயுதங்களாலும், நிரை படு
துகில் உடைகொடிகளின் -வரிசைகளாய் அமைந்த சிலைகளையுடைய
துவசங்களாலும். விராய் - கலந்து, புடவி - (சேனைபரவிய) அப்பூமியானது,
அடர் பொருப்புஇனம் இடை இடை பயில் அடவி ஒத்தது - நெருங்கிய
மலைகளின் கூட்டம்நடு நடுவே பொருந்தப் பெற்ற வனத்தைப்போன்றது;
(எ - று.)

    யானைகள் - மலைபோலுதலாலும், குடை குதிரை கொடிகள் - அடர்ந்த
மரங்கள் போலுதலாலும், கிரீடமும் ஆயுதங்களும் பொன் மணிகள்போல
விளங்குதலாலும், இங்ஙனம் வருணித்தார்.  தற்குறிப்பேற்றவுவமையணி. 
பிடர்- கழுத்தின்பின்புறம்.  கடமென்னும் யானைக் கன்னத்தின் பெயர்
அதனினின்றுவழியும் மதநீருக்கு இடவாகு பெயர்; பின்னர் 'பிடி' என
வருதலாலும், 'கடம்' என்ற அடைமொழியாலும், கரி - இங்கே
ஆண்யானையாயிற்று.  பிடி - யானையின் பெண்மைப்பெயர்.  முடி -
முடியில்தரிப்பது.  கவிகை - கவிந்துள்ளது; காரணப்பெயர்.  'பரவ' எனவும்
பாடம்.                                                (375)

15.-இது - பலவகை வாத்தியகோஷ வருணனை.

வளைமுழக்கினகிடுகுகொட்டினவயிரொலித்தனமகுடியின்
கிளையிமிழ்த்தனமுழவதிர்த்தனகிணையுரற்றினபலவிதத்
துளையிசைத்தனமுரசிரைத்தனதுடியரற்றினசெவிடுபட்
டுளையவிப்படிபடைபுறப்படவுலகமுற்றதுகலகமே.

     (இ -ள்.) (அந்தச்சேனையில்), வளை - சங்குகள், முழக்கின -
ஒலித்தன; கிடுகு - கிடுகென்னும் (ஓர்வகைப்) பறைகள், கொட்டின -
அடிக்கப்பட்டன; வயிர் - ஊதுகொம்புகள், ஒலித்தன-; மகுடியின் கிளை -
மகுடியென்னும் வாத்தியத்தின் இனங்கள், இமிழ்த்தன - ஒலித்தன; முழவு -
மிருதங்கங்கள், அதிர்த்தன - ஒலித்தன; கிணை - கிணையென்னும் பறைகள்,
உரற்றின - ஒலித்தன; பல விதம் துளை - பலவகையான துளைக்கருவிகள்,
இசைத்தன - ஒலித்தன; முரசு - பேரிகைகள், இரைத்தன - ஒலித்தன; துடி -
உடுக்கைகள், அரற்றின - ஒலித்தன; செவிடு பட்டு உளைய -
(இவ்வோசைமிகுதிகளால் கேட்பவர்) காதுகள் செவிடாகி வருந்தும்படி, இப்படி
படை புறப்பட - இவ்வாறு (பாண்டவர்) சேனை புறப்பட்டதனால், உலகம்
கலகம் உற்றது - உலக முழுவதுங் குழப்பமடைந்தது;  (எ - று.)

    உலகத்திலுள்ளவர் காது செவிடாகிக் கலங்கினர் என்பதாம்.  வளை -
உள் சுழிந்துள்ளது-  'முழக்கின' முதல் 'அரற்றின' ஈறாக உள்ள
ஒருபொருள்மேல்நின்ற பலசொற்கள் அடுத்து வந்ததனால்,
பொருட்பின்வருநிலையணி:"முன்வருஞ் சொல்லும்பொருளும்