பக்கம் எண் :

34பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) இவன் - உலூகன், ஆங்கு - அவ்விடத்தில்
[உபப்பிலாவியத்தில்], அவர்க்கு - அப்பாண்டவர்களுக்கு, அவண் நிகழ்ந்தன
எலாம் - அவ்விடத்து [அத்தினாபுரியிலே] நடந்த செய்கைகளையெல்லாம்,
அரு தகையுடன் சொல்லி - (பிறருக்கு) அருமையான தகுதியுடனே சொல்லி,
ஈங்கு வந்து - இவ்விடத்தில் [துவாரகையில்] வந்து, எழில் யாதவற்கு -
அழகையுடைய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்கு, இயம்பலும் - சொன்னவளவிலே,
யாதவன் - அந்தக் கண்ணபிரான்,- மகிழ்வு உற்று - (அதுகேட்டு)
மகிழ்ச்சியடைந்து, 'வாங்கு வெம் சிலை விசயனை - வளைந்த கொடிய
வில்லையுடைய அருச்சுனனை, விரைவினில் வர விடுக - சீக்கிரத்தில்
(இவ்விடம்) வரும்படி அனுப்புவாயாக,' என - என்று சொல்லி, மீள - மறுபடி,
ஓங்கு மா தவம் உலூகனை - சிறந்த பெருந்தவத்தையுடைய உலூகமுனிவனை,
போக்கினான் - (உபப்பிலாவியத்துக்கு) அனுப்பினான்; அவனும் -
அவ்வுலூகனும், வந்து - (உபப்பிலாவியத்துக்கு) வந்து, உரைசெய்தான் -
கிருஷ்ணபகவான் வரச்சொன்ன செய்தியை அருச்சுனனுக்குச் சொல்லி
யருளினான்; (எ - று.)

     தகை -தகுதி; இது - தொழிலடியாகப் பிறந்ததாயினும், பொருளாற்
பண்புப்பெயர்.  யாதவன் - யதுகுலத்தில் அவதரித்தவன்; தத்திதாந்தநாமம்.
துரியோதனன் பாண்டவர்க்கு இராச்சியத்தைக் கொடுத்தற்குச் சம்மதியாதது
பாரதயுத்த மூலமாகப் பலரை ஒழித்துத் தான் அவதரித்த தன் காரியமான
பூமிபாரநிவிருத்தியை விரைவில் நடத்துதற்குக் காரணமாகுமென்ற கருத்தால்,
கண்ணன் மகிழ்வு மிகுவானாயினன்.  அவர்க்கு அவண் நிகழ்ந்தன எலாம் -
அப்பாண்டவர்கள் விஷயமாக அங்கு நடந்த வார்த்தைகளையெல்லாம்,
அருந்தகையுடன் சொல்லி - (பிறரிடத்தில்) அருமையான
நற்குணங்களையுடைய தருமனுடனே கூறி என்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, அருந்தகை - பண்புத்தொகையன்மொழி.  தகையுறச் சொல்லி
என்றும் பாடம்.                                      (21)

உலூகன்தூது சருக்கம் முற்றிற்று.

-------

இரண்டாவது

வாசுதேவனைப் படைத்துணையழைத்தசருக்கம்.

     அதாவது- வசுதேவகுமாரனான கண்ணபிரானைத் தம்தமக்குப் போரில்
ஏற்ற துணையாகும்படி துரியோதனனும் அருச்சுனனும் ஒருங்கே சென்று
கூப்பிட்ட வரலாற்றைக் கூறும் பாகமென்று பொருள்.  வாஸு தேவன் -
வசுதேவகுமாரன்; காரணப்பெயர்.  இது திருமாலின் திருநாமங்களுள் ஒன்று.
வாசுதேவனை யழைத்த என இயையும்.  படை - போர்செய்தல், பகைவரை
யழித்தல்; சேனை யென்றும் பொருள்.