பக்கம் எண் :

342பாரதம்உத்தியோக பருவம்

பலிகொடுத்தனர் - (சிறப்பித்துக்) கூறப்படுகிற போர்க்களத்துக்குரிய
பலியாகக்கொடுத்துவிட்டார்கள், (பாண்டவர்கள்), என - என்று, செம் கண்
அரவம் துவசம் மீளியும் உணர்ந்து - (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய
பாம்புக்கொடியையுடைய வீரனான துரியோதனனும் அறிந்து, தன் சேனை
முதல்வற்கு உரை செய்வான் - தன்னுடைய சேனாதிபதியான வீடுமனுக்குக்
கூறுபவனானான்; (எ - று.) - அதனை மேற்கவியிற் காண்க.

    வயப்படையென்றும், சயப்படையென்றும் கவியிரண்டையும்
பட்சபாதமின்றிக் கூறினார்.  வய எனப் பிரித்தால், வலிமையென்று பொருள்
படும் உரிச்சொல்லாம்; "வயவலியாகும்" என்றார் தொல்காப்பியனார்.
இப்பாட்டில் 'உரைசெய்குவம்' என்பதுவரையில் (கதாசம்பந்தமில்லாத)
கவிக்கூற்று.  கண்சிவத்தல் - கோபக்குறி.  மீளி - வலிமையிற் சிறந்தவன்;
ஆண்பாற் சிறப்புப்பெயர்.  முதல்வன் - முதன்மையுடையவன், முதல்வற்கு
உரைசெய்வான் - நான்காமுருபு, கொடைப்பொருளின் பாற்படும்.

    இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினெட்டுக்கவிகள் பெரும்பாலும்
முதல் ஐந்துசீர்கள் விளங்காய்ச்சீர்களும், ஆறாஞ்சீர்தேமாச்சீரும், ஏழாஞ்சீர்
புளிமாச்சீரு மாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய
விருத்தங்கள்.
                                          (378)

18.-தனது சேனைவீரரைநால்வகைத் தேர்வீரராகப்
பிரிக்கும்படி வீடுமனுக்குத் துரியோதனன் கூறுதல்.

கொதிகொள்சினநெஞ்சின்வலியின்றியவரஞ்சுபுகொடுத்தனர்
                                      களப்பலிநமக்,
கெதிரொருவர்நிற்குமவரில்லையெனும்வீரநிலையானறிவ
                                      னீயறிவையே,
அதிரதர்கண்மாவிரதர்சமரதர்களர்த்தரதராகநம்மனீ
                                        கினியின்மா,
மதுகைமுடிமன்னரைவகுத்தெழுகவென்றனன் மனத்தசை
                                   விலாதவலியோன்.

     (இ -ள்.) 'கொதி கொள் சினம் - பொங்குதலைக்கொண்ட
கோபத்தையுடைய, நெஞ்சின் - மனத்திலே, வலி இன்றி - தைரியவுறுதி
யில்லாமல், அவர் - அப்பாண்டவர்கள், அஞ்சுபு - (நமக்குப்) பயந்து, களம்
பலி கொடுத்தனர் - (நமக்குமுன்) போர்க்களத்துக்குரிய பலியைக்
கொடுத்திட்டார்கள்; நமக்கு எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீரம்
நிலை - நமக்கு எதிராக நிற்குந்தன்மையர் ஒருத்தருமில்லையென்கிற
பராக்கிரமத்தன்மையை, யான் அறிவன் நீ அறிவையே - நான் அறிவேன்,
நீயும் அறிவாயன்றோ? (ஆதலின், இப்பொழுது), நம் அனீகினியில் - நமது
சேனையிலுள்ள, மா மதுகை முடிமன்னரை - மிக்கவலிமையையுடைய
கிரீடாதிபதிகளான அரசர்களை, அதிரதர்கள் மாஇரதர் சமரதர்கள்
அர்த்தரதர்ஆக - அதிரதரும் மகாரதரும் சமரதரும் அர்த்தரதருமாக,
வகுத்து - அணிவகுத்து, எழுக - (போருக்குப்) புறப்படுவாயாக' என்றனன்-
என்று(வீடுமனைநோக்கிக்) கூறினான், மனத்து அசைவுஇலாத வலியோன் -
மனத்திலே தளர்ச்சியில்லாத உறுதியையுடைய துரியோதனன்;