பக்கம் எண் :

54பாரதம்உத்தியோக பருவம்

அருச்சுனனும் கிருஷ்ணனும் தருமபுத்திரனுள்ள விடத்துச்செல்லல்.

20.கூறியவேகநாகக்கொடியவனகன்றபின்னர்த்
தேறியவிசயனோடுஞ்செழும்புனற்றுவரைநீங்கி
யாறிருநாமத்தோனுமையிருநாமத்தோனும்
ஊறியகருணைநெஞ்சினுதிட்டிரனிருக்கைபுக்கார்.

     (இ - ள்.) கூறிய - (இவ்வாறு)சொன்ன, வேகம் நாகம் கொடியவன் -
உக்கிரமான பாம்பின்வடிவத்தையெழுதின துவசத்தையுடைய துரியோதனன்,
அகன்றபின்னர் - (துவாரகையினின்று) நீங்கிச் சென்றபின்பு, (கண்ணபிரான்)
தேறிய விசயனோடும் - (தான் படைத்துணையாதற்கு உடன்பட்டதனால்)
மனந்தேறின அருச்சுனனுடனே, செழு புனல் துவரை நீங்கி - மிகுந்த
நீர்வளத்தையுடைய துவாரகாபுரியினின்று புறப்பட்டு, (விரைவில்), ஆறு இரு
நாமத்தோனும் ஐ இரு நாமத்தோனும் - பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய
அக்கண்ணனும் பத்துத்திருப்பெயர்களையுடைய அருச்சுனனும், ஊறிய கருணை
நெஞ்சின் உதிரட்டிரன் இருக்கை புக்கார் - மேன்மேற் சுரக்கின்ற
அருளையுடைய மனத்தையுடைய தருமபுத்திரனது இருப்பிடத்தை
[உபப்பிலாவியத்தில் அரண்மனையை]  அடைந்தார்கள்;        (எ - று.)

     வேகம் - விரைவுமாம்.  ஏகம் எனப்பதம் பிரித்து, ஒப்பற்ற
எனினுமாம். ஆறிருநாமத்தோன் - துவாதசநாமன்; அத்திரு நாமங்கள் -
கேசவன்,நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன்,
திரிவிக்கிரமன்,வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன்
என்பவை. ஐயிருநாமம் - 'பார்த்தனருச்சுனன் கரியோன் விசயன், பாகசாதனி
சவ்வியசாசிபற்குனன்பாரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேதவாகன் எனும் நாமம்
படைத்த பிரான்' எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திற் கூறியவை.
ஆறிரு நாமம், ஐயிருநாமம்என்பன - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்.
இருக்கை - இருத்தல்:  இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர்.  தேறிய
விசையினோடும் என்ற பாடத்திற்கு - மிக்க விரைவுடனே யென்க.       (41)

வாசுதேவனைப் படைத்துணையழைத்தசருக்கம் முற்றிற்று.

------