பக்கம் எண் :

70பாரதம்உத்தியோக பருவம்

காட்டில்அடர்ந்துள்ள மரங்கள் காற்றில் அசைதல் போலப் போர்க்களத்தில்
தொகுதியாக ஆடுங் கவந்தங்கள் அசைதலால், கவந்த கானகமென
உருவகப்படுத்தப்பட்டது.  இரத்தம் - செந்நீரெனப்படுதலால், 'சோரியின்
மூழ்கி' என்றது பொருந்தும்.                                    (57)

17.

போரதாகியபூமிசாலையின்வேலைசூழ்தருபூமியின்
பாரமானசுயோதனாதியரென்னுநூறுபசுப்படுத்
தீரமானதயாமனத்தொடிராயசூயமகஞ்செயும்
வீரமாமுனிதன்னையுங்களவேள்வியும்புரிவிப்பனே.

     (இ - ள்.) போர் பூமியது ஆகிய -யுத்தகளமாகிய, சாலையின் -
யாகசாலையிலே, வேலை சூழ்தரு பூமியின் பாரம் ஆன சுயோதன ஆதியர்
என்னும் - கடல்சூழ்ந்த நிலவுலகத்திற்குப் பெருஞ்சுமையான துரியோதனன்
முதலியோராகிய, நூறு பசு - நூறு பசுக்களை, படுத்து - கொன்று, ஈரம் ஆன
தயா மனத்தொடு இராயசூயமகம் செயும் வீர மா முனி தன்னையும்
களவேள்வியும் புரிவிப்பன் - குளிர்ச்சியான  அருளோடு கூடிய மனத்துடனே
(முன்பு) ராஜசூயமென்னும் பெரிய யாகத்தையுஞ் செய்த
வீரத்தன்மையையுடைய சிறந்த இராசவிருடியாகிய யுதிட்டிரனை (இப்பொழுது)
களவேள்வியாகிய இவ்யாகத்தையுஞ் செய்விப்பேன்; (எ - று.)

     ஏதாவது ஒரு யாகத்தைச்செய்துமுடித்தபின்பு கொடுக்கப்படுந் தக்ஷிணை
முதலிய தானமும் அவபிரதஸ்நானமும் போல யுத்தகளத்தில் போரில்
பகைவரைக் கொன்று வென்றபின் செய்யுந் தானம் முதலிய சில பரிகாரத்
தொழில்கள் வேள்வியெனப்படும்; இது சிந்தாமணியிலும், புறநானூற்றிலுங்
கண்டது.  உருவகவணி.  சுயோதனாதியரென்னும் பசு என உருவகத்தில்
உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று; திணைவழுவமைதி.  யாகத்திற்
கொல்லப்பட்ட பசுக்கள் நற்கதி பெறுவதாக நூல்களிற்
கூறப்பட்டிருத்தல்போலப் போரிற் கொல்லப்பட்டவர் வீரசுவர்க்கம் பெறுதல்
மரபு.  விவேக மில்லாமல் ஆகாரம், நித்திரை, பயம் முதலியவற்றை
மாத்திரமேயுடைய துரியோதனாதியர் விலங்குபோலுதலால்,
'சுயோதனாதியரென்னும் பசு' என்றான்.  இராயசூயம் அரசர்களனைவரையும்
வென்று அவர்தருந் திறைப் பொருள்கொண்டு செய்யப்படுவதொரு
பெருவேள்வி.  மிகக்கனமான மலை முதலிய பாரங்களையெல்லாம் பொறுக்கும்
பூமிக்குப் பாவிகளைச் சுமத்தலே பொறுத்தற்கரிய பாரமாம் என்பது நூற்றிணிபு;
"அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொலுரைப்பான்
பொறை" எனத் திருக்குறளிலுங் காண்க.  ஈற்றடி - இரண்டு செயப்படுபொருள்
வந்தவினை.                       (58)

சஞ்சயமுனிவனை நோக்கிக் கண்ணன் கூறுதல்.

18.

நேமியானிவைசொன்னவீரனைநிற்கவென்றுநிறுத்தியுட்
காமியாதமுனிக்குநல்லுரைகட்டுரைத்தனனிவர்களிப்
பூமியாளுதலவர்களுக்கமருலகமேறுதல்புரிதவம்
யாமியாதுமுரைத்துமென்பயனீயெழுந்தருளென்னவே.