பக்கம் எண் :

72பாரதம்உத்தியோக பருவம்

தரு காளை பரிந்து சொற்றதும் -யமதருமராசன் பெற்ற புத்திரனான
யுதிட்டிரன் (இராச்சியத்தில்) விருப்பங்கொண்டு சொன்ன வார்த்தையையும்,
வீமன் நின்று பகர்ந்ததும் - வீமசேனன் (கோபத்தோடு) நின்று சொன்ன
வார்த்தையையும், குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் - குருந்தமரத்தை
முறித்தருளின மேகம்போன்ற கண்ணபிரான் கூறியருளிய வார்த்தையையும்,
அவனிபனுடன் - திருதராஷ்டிர மகாராசனுடனே, உண்மை ஆம் வகை
கூறினான் - உண்மையாகிய வகையிலே சொல்லியருளினான்; (எ - று.)

     வந்த பிரயாணம் பயன்படாமல் உடனேமீண்டு சென்றமை தோன்ற,
'மீள அத்தினபுரியடைந்து' எனப்பட்டது.  நீர் நிரம்பின கடல்போலத் தவம்
நிரம்பின முனிவனென்பார், 'தவக்கடல்' என்றார்.  படி - வகையென்னும்
பொருள்தரும் இடைச்சொல்.  அறன் என்பதை இறுதிப்போலிபெற்ற
தெய்வமுணர்த்தும் அஃறிணைப்பெய ரென்றாவது, அறம் என்னும்
அஃறிணையின்மேற் பிறந்த உயர்திணைப்பெயரென்றாவது கொள்க.  காளை -
இளவெருது; இது இங்கே யுதி்ட்டிரனுக்கு உவமவாகுபெயர்; இது - வீரனுக்கு
நடை வலிமை காம்பீரியங்களால் உவமையாம்.  கம்சனாலேவப்பட்டு வந்த
அசுரர்களுள் ஒருவன் அழகியதொரு குருந்த மரத்தின் வடிவங்கொண்டு
கண்ணன்மேல் விழுந்து அவனைக் கொல்வதாக இருக்கையில், அம்மரத்தைக்
கண்ணபிரான் விளையாட்டாக முறித்தருளினானென உணர்க.       (60)

சஞ்சயன் தூதுசருக்கம் முற்றிற்று.
-------


நான்காவது
கிருட்டிணன் தூது சருக்கம்.

     ஸ்ரீகிருஷ்ணபகவான் பாண்டவர்க்காகத் துரியோதனனிடத்துத் தூது
சென்ற வரலாற்றை யுணர்த்தும் பாகம்.  க்ருஷ்ணன் என்ற வடமொழிப் பெயர்
- கருநிறமுடையவனென்றும், (யாவர் மனத்தையும்) கவர்பவனென்றும்,
(எல்லாத்தொழில்களையுஞ்) செய்பவனென்றும், அசுரர்களுயிரைப்
பறிப்பவனென்றும், மற்றும் சிலவகையாகவும் பொருள்படும்.  கிருட்டிணனது
தூது என ஆறாம்வேற்றுமைத்தொகை.

    கிருஷ்ணன் - திருமாலின் ஒன்பதாம் அவதாரமூர்த்தி; வசுதேவர்க்கும்
தேவகிக்கும் திருமகனாய்த் திருவவதரித்து, இடையர் தலைவனாகிய
நந்தகோபனும் அவன் மனைவியான யசோதையும் வளர்க்க வளர்ந்தவன்.

    இந்நூலில் சங்கேதத்தால் பருவம் என்பது பெரும்பிரிவையும், சருக்கம் என்பது சிறுபிரிவையும்குறிக்கும்.