பக்கம் எண் :

86பாரதம்உத்தியோக பருவம்

ஒலித்தற்குஇடமான குளிர்ச்சியாகிய நாட்டின் பாகத்தையும் தாயமும் - அப்
பங்குக்கு உரிய செல்வ அதிகாரங்களையும், (துரியோதனன் கொடுப்பான்);
தான் தாரான் ஆகில் - அவன் (அப்படி நமக்குக்) கொடாமற் போவானானால்,
மீது - அதற்கு மேல்,- ஊது வளை குலமும் - ஊதப்படுகிற (சாதாரணமான)
சங்குகளின் கூட்டங்களும், வலம்புரியும் - (சிறந்த) வலம்புரிச் சங்குகளும், மிக
முழங்க - மிகுதியாக ஒலி செய்யவும், வெய்ய காலன் மா தூதர் மனம்
களிக்க, - கொடிய யமனது பெரிய தூதர்கள் மனம் மிக மகிழவும், பொருது
எனினும் - போர்செய்தாயினும், பெறுவன் - (இராச்சியத்தைப்) பெறுவேன்;
இது - இங்ஙனம் முதலிற் சமாதான வழியை முயன்று அது கூடாவிட்டால்
பின்பு போர் செய்வது, வசையும் அன்றே - பழியுமாகாதே; (எ - று.)

    இப்படிச் செய்வதில் குரவர்முதலியோரைக் கூசாது கொன்றானென்ற
பழிப்பும் போருக்கு அஞ்சி வனம்புகுந்தானென்ற பழிப்பும் ஆகிய
இரண்டுக்கும் இடமில்லை யென்ற கருத்தால், 'வசையுமன்று' என்றான்.  முதல்
மூன்று உபாயங்களில் வழிப்படாத எதிரிகளை முடிவில் தண்டோபாயத்தால்
தொலைத்தல் இராஜநீதியாதலால் அது பழிபாவங்கட்கு இடமாகாது என்பது
கருத்து.  பொறுமையில்லாமல் உறவினர்களை அழிக்கத் தொடங்கி
விட்டோமென்று பின்பு ஒருவர் சொல்லுதற்கு இடமில்லாதபடி பகைவர்
கொள்கையை முழுதும் தெளிவாக முன்னமே அறிந்திடுதல் அவசியம்;
ஆதலால், முன் ஒருமுறை புரோகிதன் தூதுசென்றதேயன்றி மீண்டும் ஒருமுறை
எல்லாவுபாயங்களிலும் வல்லவனான நீயே நேரிற் சென்று தந்திரமாகக்கேட்ட
பின்பும் துரியோதனன் இராச்சியபாகம் கொடுத்திடாது மறுப்பனாயின் அதன்
பிறகு நாம் அப்பக்கத்தாரைப் போரில் அழிப்பது தவறாகாது:  ஆனதுபற்றி, நீ
எங்கட்காக ஒருகால் தூது சென்றருளவேண்டும் என்று வேண்டியபடி.

     நினைவின் வண்ணம் தாரானாகில் எனஇயையும்.  தாது - மகரந்தப்
பொடியுமாம்.  தாதூதி யளிமுரலும், தண் என்ற அடைமொழிகள் - நாட்டின்
நிலவள நீர்வளங்களை உணர்த்தும்.  வளைக்குலம் - ஒன்றன்கூட்டத்
தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத்தொகை.  பின்னே 'வலம்புரி'
என்றமையின், 'வளைக்குலம்' என்றது, இடம்புரியைக் குறிக்கு மென்னலாம்.
வளை - (உள்ளே) சுழிந்த வடிவமுடையது; வலம்புரி - வலப்பக்கத்தாற்
சுழிந்திருப்பது; காரணப்பெயர்கள்.  (வலம்புரிக்கு எதிர் - இடம்புரி.)
இடம்புரிச்சங்கு ஆயிரஞ்சூழ்ந்தது வலம்புரியென நூல்கள் கூறும்; என்பது,
சாதாரண சங்கத்தினும் வலம்புரிச்சங்குக்கு ஆயிரமடங்கு அதிகமாகவுள்ள
சிறப்பைத் தெரிவிப்பதாம்.  வெற்றிச்சங்கு, மங்கலச்சங்கு, கொடைச்சங்கு என்ற
மூவகையுள், இங்குக் கூறியன - வெற்றி குறிப்பன.  யமதூதர்கள் பயங்கரமான
பெரிய வடிவங்கொண்டு வந்து உயிரைத் தவறாது கொண்டே விடுவராதலால்
அவர்களை "மாதூதர்" என விசேடித்தபடி.  அவர்கள் பல