தான் தூதுசென்றால் சமாதானமில்லாமல்போரையே செய்யும்படி முடிவு செய்துவரலாமென்பதுமாம். ஸு் ரர்- பாற்கடல் கடைந்தகாலத்து அதனினின்று தோன்றியதொரு வாருணியென்னுஞ் சிறந்த சுரையைப் பானஞ்செய்தவரென்பது பற்றிய காரணப்பெயர்; சுரை - மது. சுருதி - எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக் கிரமத்தில் கர்ணபரம்பரையிலே கேள்வியில் வழங்குவதென்று பொருள்படுங் காரணப்பெயர். பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நாடிச்சொல்லிக்கொண்டே சென்ற வேதம் அதன் முடிவு தனக்கு எட்டாமையால் மீண்டதென்பது, அவ்வேதம் சொல்வதனாலேயே தெரிகிறது; ஆனதனால், "ஆரேயறிவா ரனைத்துலகு முண்டுமிழந்த, பேராழியான்தன் பெருமையை" என்றபடி எம்பெருமானது தன்மை தேவர் முனிவர்யாவர்க்கும் அறிதற்கு அரியதாதலாலும், "சுரருடனே முனிவர்களும் சுருதிநான்கும் தேடுகின்ற பதம்" எனப்பட்டது. வேண்டா - வேண்டுமென்பதன் எதிர்மறை; 'வேண்டாம்' என்பதும் பாடம். பாவை - சித்திரப் பிரதிமைபோல அழகியவள்; மனத்திற்குத் திருப்தி யுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக எழுதக் கூடுமாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்; இனி, கண்மணிப் பாவைபோல அருமையானவ ளென்றுமாம்; பாவை போல்பவளைப் பாவையென்றது உவமையாகுபெயர். மடப்பாவை - மடமை பாவை என்றாவது, மடம் பாவை என்றாவது பிரிக்க; மடமை - இளமை; மகளிர்க்கு உரிய குணங்களிலொன்றான பேதைமையுமாம். வரம் - விருப்பமுமாம். கோடுகின்ற மொழியவன் - நீதிதவறிய சொற்களை யுடையவன், சொன்னசொல் மாறுபட்டவன். அவன் சொன்னசொல் தவறியமைக்குத் தானே தூதுசெல்லுதல் தகுதி யென்பது, நான்காமடியின் கருத்து. என்னைத் தூதனுப்பினால் வெற்றி தவறாதென்பான், 'என்னைத் தூதுவிடுக இனிக்கொற்ற வேந்தே' என்றான். (79) 20. | மலைகண்டதெனவென்கைம்மறத்தண்டின்வலிகண்டு மக வான்மைந்தன், சிலைகண்டுமிருவர்பொருந் திறல்கண்டு மெமக்காகத் திருமானின்ற, நிலைகண்டுமிவள்விரித்த குழல்கண்டு மிமைப்பொழுதினேரார் தம்மைக், கொலைகண்டுமகிழாம லவன்குடைக்கீ ழுயிர்வாழக் குறிக்கின்றாயே. |
(இ -ள்.) மலை கண்டது என - மலையைப் பார்த்தாற்போல, என் கை மறம் தண்டின் வலி கண்டும் - எனது கையிலுள்ள கொடுமையுடைய கதாயுதத்தினது வலிமையைப் பார்த்திருந்தும், மகவான் மைந்தன் சிலை கண்டும் - இந்திரனது குமாரனான அருச்சுனனது காண்டீப வில்லின் தொழிலைப் பார்த்திருந்தும், இருவர் பொரும் திறல் கண்டும் - மற்றையிரண்டு தம்பியராகிய நகுல சகதேவர்கள் போர்செய்யும் வல்லமையைப் பார்த்திருந்தும், எமக்கு ஆக திருமால் நின்ற நிலை கண்டும் - நமக்கு உதவியாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணமூர்த்தி உடன்பட்டு நின்ற உறுதிநிலையைப் பார்த் |