திருந்தும், இவள் விரித்த குழல் கண்டும் -இத்திரௌபதி விரித்துள்ள கூந்தலைப் பார்த்திருந்தும், இமைப் பொழுதில் நேரார் தம்மை கொலைகண்டு மகிழாமல் - ஒரு நொடிப் பொழுதினுள்ளே பகைவர்களை (நாங்கள்) கொலை செய்தலைப் பார்த்து உவப்படையாமல், அவன் குடைக்கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே - அத்துரியோதனனது ஆளுகையின் கீழ் (அடங்கியிருந்து அரசுபெற்று) உயிரோடு கூடிவாழ எண்ணுகின்றாயே! (எ - று.)- ஏகாரம் - அவ்வெண்ணத்தின் இழிவை நன்கு விளக்கும். 'இவள் விரித்த குழல் கண்டும்'என்றதனால், துரியோதனாதியரைக் கொல்லுதற்குக் காரணமும், மற்றையவற்றால் அவர்களைக் கொல்லுதற்கு ஏற்ற ஆற்றலும் கூறியவாறாம். இங்கு 'உயிர்வாழக் குறிக்கின்றாயே' என்றதனால், இங்ஙனம் மானங்கெட்டு வாழ்தலினும் இறத்தலே தகுதி யென்பது போதரும். எமக்கு ஆக - எமக்கு (வெற்றி) உண்டாக என்றலுமாம். வீமன் கையிலுள்ள கதாயுதம்பகைவர்களைத் தவறாது கொல்லும் இயல்பினதாய்ச் சத்ருகாதிநி யென்று பெயர் பெறும்; அதனது அவ்வகையான சிறப்புத் தோன்ற, 'மறத்தண்டு' என்றான். வீமனுக்கு இக்கதை, அசுரத்தச்சனான மயனால் அளிக்கப்பட்டது. அருச்சுனனுக்குக் காண்டீவ வில், காண்டவ தகன காலத்திலே அக்கினி பகவான் கொடுத்தது. மகவான் என்ற சொல்லுக்கு - யாகங்களை யுடையவனென்று காரணப்பொருள்; மகம் - யாகம்; வான் - ஆண்பாற் பெயர்விகுதி. நூறு அசுவமேதயாகங்களைச் செய்து தேவராசபதவி பெறுதலால், இந்திரனுக்கு இப்பெயர்: யாகத்திற் கொண்டாடப்படுந் தேவர்கள் பலர்க்குந் தலைவனாதல் பற்றியுமாம். இருவர் - தொகைக்குறிப்பு: இரட்டைய ரென்றவாறுமாம். இமைப்பொழுது - இயற்கையில் ஒருகால் கண்ணிமைகளை மூடித்திறத்தற்கு வேண்டும் பொழுது. நேரார் என்பதற்கு - உடன்பட்டு இணங்கி வாழாதவரென்று பொருள்; எனவே, பகைவராம்; எதிர்மறைப் பலர்பால்வினையாலணையும்பெயர். உம்மைகள் - உயர்வுசிறப்பு. (80) 21.-கண்ணன் வீமனைச் சமாதானப் படுத்துதல். வெம்புயவீமனும் வெகுண்டு மீண்டுமிவை யெடுத்துரைப்ப மேகமேனிப், பைம்பொனெடுந் தனித்திகிரிப் பரந்தாமன்கருணையுடன் பரிந்துநோக்கி, யம்புவியின் முன்பிறந்தோரரசுநெறிமுறையுரைத்தா லதுகேளாமற், றம்பியருமறுப்பரோதலைவவினிக்கடுங்கோபந் தணிகவென்றான். |
(இ - ள்.) வெம்புயம் வீமனும் -(பகைவர்க்குப்) பயங்கரமான தோள்களையுடைய வீமசேனனும், வெகுண்டு - கோபங்கொண்டு, இவை மீண்டும் எடுத்து உரைப்ப - இவ்வார்த்தைகளை மறுபடியும் எடுத்துச் சொல்ல,- (அப்பொழுது),- மேகம் மேனி - மேகம்போற்கரிய திருமேனியையும், பைம்பொன் நெடுந் தனிதிகிரி - பசும் பொன்மயமான பெரிய ஒப்பற்ற சக்கராயுதத்தையுமுடைய, பரந்தாமன் - |