(இ - ள்.) என்னை ஆண்டதாள் - என்னை அடிமையாக ஆட்கொண்டருளிய (திருமாலினது) திருவடிகள்,-தேடிய - (எங்கு உள்ளாளென்று) தேடத்தக்க [இன்னாளென்று அறியவெண்ணாதபடி வேற்றுருவடைந்த], அகலிகை - அகலிகையயினது, சாபம் - சாபத்தை, தீர்த்த - (ஸ்ரீராமாவதாரகாலத்தில்) நீக்கியருளிய, தாள் - திருவடிகளும், நீடிய உலகு எலாம் - நீண்ட உலகங்களெல்லாவற்றையும், அளந்து - (திரிவிக்கிரமாவதார காலத்தில்) அளவாநின்றுகொண்டு, நீண்ட - நீண்டுசென்ற, தாள் - திருவடிகளும், ஒடிய - (தன்னைக்கொல்லும்பொருட்டு) விரைந்துவந்த, சகடு - சகடாசுரன், இற - அழியும்படி, உதைத்து - (கிருஷ்ணாவதாரகாலத்திலே) உதைத்து, பாம்பின் மேல் ஆடிஉம் - (காளியனென்னும்) நாகத்தின்மேல் கூத்தாடியும், சிவந்த - செந்நிறமடைந்த, தாள் - திருவடிகளுமாம். தமக்குஉரிய கடவுளினது சீர்பாதங்களின் பற்பல மகிமையை எடுத்துக் கூறியவாறு. 'தேடியவ்வகலிகை' என்ற பாடத்துக்கு - அவ்வகலிகையுள்ள விடத்தில்தாமாகச்சென்று என்ற பொருள் கூறுக. சகடு - ஸகடம் என்னும் வடமொழித் திரிபு:பண்டியென்று பொருள். ஆடியும், உம் - இறந்ததுதழுவியது. 'உதைத்தும்' எனப்பாடங்கொள்ளின், இரண்டும்- எண்ணும்மை. அகலிகை - அஹல்யா என்னும் வடமொழித் திரிபு: இச் சொல்லுக்கு அழகில்லாமையில்லாதவ ளென்று பொருள்: மிக்க அழகுடையவ ளென்று கருத்து; ஹலம் என்றார் விரூபம்: ஹல்யம் - அழகின்மை. இவள்-கௌதம முனிவரது மனைவி: சநகமகாராசாவுக்குப் புரோகிதராகிய சதாநந்தமுனிவரது தாய். பிரமதேவர் பூர்வத்தில் ரூபத்திலுங் குரலிலும் பேதமில்லாமல் ஒருபடிப்படவே பிரஜைகளைப் படைத்துவந்தார்; பின்பு, ஒருவர்க்கொருவர் வேற்றுமையின்றி யிருப்பது நலமன் றெனக் கருதி, முன்படைத்த பிரஜைகளுக்கு அந்தந்த அங்கங்களிலுள்ள சிறப்பையெல்லா மெடுத்து, அதைக்கொண்டு அழகுமிகுந்த பெண்ணொருத்தியைச் சிருஷ்டித்து, அவளுக்கு அஹல்யையென்று பெயரிட்டார்; அப்பொழுது இந்திரன் இம்மேலான பெண்ணுக்குக் தக்ககொழுநன் மேலான தானேயன்றி வேறில்லை யென்று செருக்குற்றிருந்தான்; படைத்தற்கடவுள் அவளை அவனுக்குக் கொடாமல் கௌதமமுனிவரிடம் கொடுத்து 'இவளைப் பாதுகாத்துவாரும்' எனக் கட்டளையிட்டார்; அவ்வாறே அவர் வெகுகாலம் பாதுகாத்துப் பின்பு பிதாமகக்கடவுளிடங் கொணர்ந்து விட்டார்; கௌதமரது மனஞ் சபலப்படாம லிருந்ததையும், அவரது தவநிட்டையையுங் கண்டு, நான்முகக்கடவுள் உவந்து அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினார்; இந்திரனோ பொறாமை கொண்டு வேற்றுருவத்தால் அவளைக் கற்பழிக்கக் கருதினான்: இவ்வாறு பலநாளாய்ப்பெருங்காதல்கொண்டிருந்த தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் கௌதமராச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவது போலக் கூவ, அது கேட்ட முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்ட தெனக்கருதி |