பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்119

     (இ - ள்.) உடைகின்றமை-(இங்ஙனம் தன்சேனை) அழிகின்றதை, கண்டு-
பார்த்து, உரகம் துவசன்-பாம்புக்கொடியனான துரியோதனன், குடைஉம் கொடிஉம்
குளிர் மா முரசுஉம் படைஉம் சில தம்பியர்உம் பலர்உம் புடைகொண்டு வர-
வெண்கொற்றக்குடையும் துவசமும் அச்சத்தைத்தருகிற பெரியபேரிகைகளும்
சேனைகளும் சில தம்பிமார்களும் வேறுபலரும் பக்கத்திற்சூழ்ந்துவர, அவன்
மேல்போனான்-அவ்வீமன்மீது (போருக்குச்) சென்றான்; (எ-று.)-இனி, குளிர்
மா முரசு-ஒலிக்கிற சிறந்தபேரிகை யெனவுமாம்.                   (156)

18.-துரியோதனன் வீமனுடைய வில்லும் கவசமும் அழியக்
கணை தொடுத்தல்.

வீமற்கெதிர்நின்றவன்வில்லறவுஞ்
சேமக்கவசஞ்சிதைவுற்றிடவும்
நாமக்கணையேவினனாயகனா
மாமுத்தமதிக்குடைமன்னவனே.

     (இ - ள்.) நாயகன் ஆம்-(குருநாட்டுக்குத்) தலைவனாகிய, மா முத்தம் மதி
குடை மன்னவன் - சிறந்த [பெரிய] முத்துக்களினாலாகிய பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய துரியோதனராசன், வீமற்கு எதிர் நின்று-(போய்)
வீமசேனனுக்கு எதிரிலே நின்று, அவன் வில் அறஉம்-அவனது வில் துணிபடவும்,
சேமம் கவசம் சிதைவுற்றிடஉம் -(உடம்புக்குப்) பாதுகாப்பாகவுள்ள (அவனது)
கவசம்அழிவடையவும், நாமம் கணை ஏவினன்-அச்சத்தைத்தருகிற அம்புகளைச்
செலுத்தினான்;   (எ - று.)

     சேமம்-க்ஷேமம் என்னும் வடமொழித்திரிபு. நாம் - அச்சப்
பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்: அம்-சாரியை.                 (157)

19.-வீமன் துரியோதனன்மீது கடுமையாகக் கணைதொடுத்தல்.

ஆறம்பினிலற்றரவத்துவச

நூறம்பகன்மார்பினுழைந்தனபின்

வேறம்புதொடுத்திலன்வீமனவன்

மாறம்புதொடுத்தனன்மற்றிவன்மேல்.

     (இ - ள்.) (அப்பொழுது வீமன்விட்ட), ஆறு அம்பினில்-ஆறு பாணங்களால்,
அரவம் துவசம்-(துரியோதனனது) பாம்புக்கொடி, அற்று - அறுபட, நூறு அம்பு-
(அவ்வீமனது) நூறுபாணம், அகல் மார்பில் நுழைந்தன-(துரியோதனனது) பரந்த
மார்பிலே புதைந்து ஊடுருவின;  பின்-அதன்பின், வீமன்-, வேறு அம்பு
தொடுத்திலன்-வேறுபாணன் தொடுத்தானில்லை; அவன் - அத்துரியோதனன்,
மற்று-பின்பு, இவன்மேல்-இவ்வீமன்மேல், மாறு அம்பு தொடுத்தனன்-
எதிரம்புகளைப்பிரயோகித்தான்; (எ - று.)

     அரவத்துவசன் மார்பில் நூறம்பு நுழைந்த அப்பொழுதில் வீமன்
வேறம்புதொடுக்காமை, தழிஞ்சியென்னும் புறப்பொருள் திணையின் பாற்படும்;
அது-சாய்ந்தார்மேற் படராமை.                                 (158)