பக்கம் எண் :

120பாரதம்வீட்டும பருவம்

20.-துரியோதனன் கடுங்கணைவிடவே வீமன் வெகுளுதல்.

சிங்கக்கொடியற்றணிதேர்சிதைவுற்
றங்கத்தினுழைந்தனவம்புகளுந்
துங்கக்கடகத்திரடோள்புடையா
வெங்கட்கனல்வீமன்வெகுண்டனனே.

     (இ - ள்.) (துரியோதனன் விட்ட அம்புகளால்), சிங்கம் கொடி அற்று-
சிங்கத்தின்வடிவமெழுதிய (வீமனது) துவசம் துணிபட, அணி தேர் சிதைவுற்று-
அழகிய தேரும் அழிவடைய, அங்கத்தின்உம் அம்புகள் நுழைந்தன -
வீமனுடம்பிலும் துரியோதனனம்புகள் தைத்துச்சென்றன; (அப்பொழுது), வெம்
கண்கனல் வீமன்- உக்கிரமானகண்களிற் கோபாக்கினியுடைய வீமசேனன்,
துங்கம் கடகம்திரள் தோள் புடையா- உயர்வானவையும் கடக மென்னும்
ஒருவகையணியையணிந்தவையும் திரண்டுள்ளவையுமான தனது தோள்களைக்
(கைகளால்) கொட்டி,வெகுண்டனன் - சினங்காட்டினான்;  (எ-று.)--அற்று,
உற்று- எச்சத்திரிபுகள்.இரண்டாம் அடியில் உம்மை மாறுக. தோள்புடைத்தல்-
கோபாவேசம்.

21.-வீமன்நொந்தானென்று தம்பிமார்முதலியோர் துணையாகவருதல்.

நொந்தானிவனென்றுநுதிக்கதிர்வே
லந்தார்முடிமன்னரநேகருடன்
வந்தார்பலதம்பியர்மைத்துனருங்
கொந்தார்தொடைவீரகுமாரருமே.

     (இ - ள்.) (அப்பொழுது),  இவன் நொந்தான் என்று - இவ்வீமன்
(துரியோதனனம்புகளால்) வருத்தமுற்றா னென்று கருதி, நுதி கதிர் வேல் அம் தார்
முடி மன்னர் அநேகருடன் - கூர் நுனியையும் ஒளியையுமுடைய வேலாயுதத்தையும்
அழகிய மாலையையும் கிரீடத்தையு முடைய பல அரசர்களுடனே, பல தம்பியர்
மைத்துனர்உம்-தம்பிமாரும் மைத்துனன்மாருமாகிய அநேகம்பேரும், கொந்து ஆர்
தொடை வீர குமாரர்உம் - பூங்கொத்துப் பொருந்தின மாலையையுடைய
வீரர்களானஇராசகுமாரர்களும், வந்தார் - (வீமனுக்கு உதவியாக) வந்தார்கள்;
(எ-று.)

     நுதி - வடசொல். மைத்துனர் - இங்கே, மனைவியின் உடன் பிறந்தவர்;
என்றது, திரௌபதிக்கு உடன்பிறந்தமுறையாகுபவரை. கொந்து -எதுகை நோக்கிய
மெலித்தல். கொந்து ஆர் தொடை- திரட்சி பொருந்தின மாலை யென்றும்
உரைக்கலாம்.                                         (160)    

22.-துரியோதனன்பக்கத்தும் பலமன்னர் துணையாகத்திரளுதல்.

மலருங் குடைமன் னவர்வந் தமைகண்
டலருங் கொடிவா ளரவோ னருகே
பலருங் கரிதேர் பரியா ளுடனே
சிலரும் புவிபா லர்திரண் டனரே.