39- காந்தாரி தம்புதல்வர் ஐவர் இறந்ததற்குக் கலங்கிக் கண்ணீர்வடித்துச் சோர்வுறல். பூண்பாய்மார்பிற்புத்திரர்தம்மைப்பொலிவோடுங் காண்பாளைவர்க்கண்டிலள்பெற்றகாந்தாரி சேண்பாலெய்தச்சென்றனரோவென்றிருகண்ணீர் தூண்பாலாகிச்சோர்தரவுள்ளஞ்சோர்வுற்றாள். |
(இ-ள்.) பெற்ற-(துரியோதனாதியர் நூற்றுவரைப்) பெற்ற (தாயான), காந்தாரி-, பூண் பாய் மார்பின் புத்திரர்தம்மை - ஆபரணங்கள் பரவிய மார்பையுடைய (தன்) பிள்ளைகளையெல்லாம், பொலிவோடுஉம்-மகிழ்ச்சியுடனே, காண்பாள் - (தினந்தோறும்) காண்பவள், ஐவர் கண்டிலள்-(அன்றையதினம் அவர்களுள்) ஐந்துபேரைக் காணாதவளாய்,-சேண் பால் எய்த சென்றனர்ஒ என்று- 'வீரசுவர்க்கத்தினிடத்தை அடையப் போயினார்களோ?' என்றுசொல்லி, இரு கண் நீர் தூண் பால் ஆகி சோர்தர - (தன்) இரண்டு கண்களினின்றும் நீர் தூணின் தன்மையை யொத்து [பெருந்தாரையாக]ப் பெருக, உள்ளம் சோர்வு உற்றாள்- மனத்தளர்ச்சியை யடைந்தாள்; (எ-று.) காந்தாரி-திருதராட்டிரனது மனைவி: சகுனியின் உடன்பிறந்தவள். தூண்பாலாகி-(தான்) தூண்போலசைவற்று எனினுமாம். சென்றனரோ, ஓகாரம்- இரக்கம். சேண்-ஆகாயம்; சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர். (178) 40.-காந்தாரி வருந்தியது கொன்னேகுந்திமைந்தரிருக்கக்கொலையுண்டீர் முன்னேமுன்னுமுன்னமுடிந்ததின்றென்னா மின்னேயென்னமெய்குலையாமண்மிசைவீழ்ந்தாள் என்னேயென்னேயென்றினையாநின்றென்செய்தாள். |
(இ-ள்.) 'குந்தி மைந்தர்-பாண்டவர்கள் ஐவரும், கொன்னே இருக்க- அழிவடையமாலேயிருக்க, கொலை உண்டீர்-(நீங்கள்மாத்திரம்) கொலைப்பட்டீர்கள்; முன்னே முன்னும் முன்னம் - முன்னே (அவர்கள்) எண்ணின எண்ணம், இன்று முடிந்தது-இன்றைக்குப் பலித்தது', என்னா-என்று சொல்லி, மெய் குலையா-உடம்பு நடுங்கி, - மின்னே என்ன-மின்னல் விழுவதுபோல, மண்மிசை வீழ்ந்தாள்- தரையிலே விழுந்து, என்னே என்னே என்று-இது என்னதுக்கம்! என்னதுக்கம்!! என்று, இனையா நின்று-மனம் வருந்திநின்று, என்செய்தாள்-என்னபாடுபட்டாள்! (எ-று.) - மிகுந்த விசன மடைந்தாள் என்றபடி. திருதராஷ்டிரனது 'மனைவியாகிய தனக்குப் பாண்டுவின் மனைவியாகிய குந்தியினிடம் உள்ள பங்காளிக்காய்ச்சலால், 'குந்திமைந்தர்' என்றாள்; (ஆதியிலும் குந்திக்கு முதலில் பிள்ளை பிறந்தது கேட்டு இவள் மிகப்பொறாமையுற்றுத் தன் கருக்கொண்ட வயிற்றைக் கல்லாற் குத்திக்கொண்டது காண்க.) முன்னே முன்னும் |