பக்கம் எண் :

132பாரதம்வீட்டும பருவம்

முன்னம்-என்மக்களைக் கொல்லவேண்டுமென்ற எண்ணம் - என்னே என்னே-
சோகக்குறிப்பு. மாத்திரியினிடம் பிறந்த நகுல சகதேவரையும் சேர்த்து
'குந்திமைந்தர்' என்று இங்கே அபேதமாகக் கூறியது, அந்த மாத்திரிக்குப்
புதல்வரைப் பெறும் மந்திர முபதேசித்தவள் குந்தி யாதலாலும், பாண்டுவோடு
மாத்திரி சககமநஞ்செய்து இறந்துவிட அவ்விருவரையும் குந்தியே
அன்போடுவளர்த்தன ளாதலாலும் என்க. பி-ம்:- முடிந்ததெனமுன்னா.
முடிந்ததின்னென்னா.                                        (179)      

41- கவிக்கூற்று: காந்தாரி அன்றுதான் வருத்தமின்னதென்று
அறியத் தொடங்கினாளெனல்.

வீறார்கற்பின்மின்னனையாளைவிறல்மைந்தர்
ஏறாமன்றிலேற்றவுமாமன்றென்னாதாள்
ஊறாவன்பிற்கண்ணறைமன்னனொருதேவி
யாறாவெள்ளத்துன்புறவன்றேயடியிட்டாள்.

     (இ-ள்.) வீறு ஆர்-பெருமைமிக்க, கற்பின்-பதிவிரதா தருமத்தையுடைய,
மின்அனையாளை-மின்னற்கொடியையொத்த திரௌபதியை, விறல் மைந்தர் -
வலிமையையுடைய (தன்) பிள்ளைகளான துரியோதனனும் துச்சாதனனும், ஏறா
மன்றில் ஏற்றஉம்-(பெண்கள்) செல்லத்தகாத இராசசபையிலே (பலாத்காரமாகச்)
செலுத்தவும், ஆம் அன்று என்னாதாள்-(இது) தக்கதன் றென்று சொல்லாதவளாகிய,
ஊறா அன்பின் - சிறிதும் உண்டாகாத அன்பையுடைய, கண்ணறை மன்னன்
ஒருதேவி-பிறவிக்குருடனான திருதராட்டிரனது ஒப்பற்ற மனைவியான காந்தாரி,
ஆறா - தணியாத, துன்பு-(புத்திர)சோகமாகிய, வெள்ளம்-வெள்ளத்திலே, உற-
சேர்வதற்கு, அன்றே அடி இட்டாள் - அன்றைத்தினமே கால்வைத்தாள்
[தொடங்கினாள்]; (எ-று.)

     துரியோதனாதியர் நூற்றுவருள் சிலர் முந்தி இறந்த தினம்
அத்தினமேயாதலால், 'அன்றே யடியிட்டாள்' என்றார். தகுதியன்றென்று
சொல்லாதவளென்றதனால், தகுதியென்று உடன்பட்டவளென்பது பெறப்படும்.
அத்தீவினையின்பயனே புத்திரசோகத்தை யனுபவிக்கச்செய்த தென்றவாறு.
கண்ணறைமன்னனொருதேவி-கண்ணில்லாதவனுக்கு ஏற்றதேவி. ஏற்றவும், உம்-
இழிவுசிறப்பு.                                                (180)

42.-சூரியோதய வருணனை.

ஆளாய் மாய்ந்த வேந்தரி டந்தோ றழுமோசை
கேளா வெப்போ தேகுவ மென்றக் கிளர்கங்குன்
மீளா வோடிற் றத்திசை வானோன் மிளிர்சென்னிச்
சூளா மணிபோல் வந்தது காலைச் சுடரம்மா.

     (இ-ள்.) ஆள் ஆய் மாய்ந்த - வீரர்களாயிருந்து இறந்த, வேந்தர்-
அரசர்கள்பொருட்டாக, இடம் தோறு அழும்-பல இடங்களிலும் அழுகிற, ஒசை-
ஓசையை, கேளா-(நாம்) கேட்காமல், எ போது ஏகுவம் என்று - எப்பொழுது
நீங்குவோ மென்று கருதி,