அ கிளர் கங்குல் - அந்த (இருள்) நிறைந்த இரவானது, மீளா ஓடிற்று-மீண்டு ஓடிவிட்டது; (அப்பொழுது), காலை சுடர் - உதய காலத்துக்கு உரிய ஒளியாகிய சூரியன்,-அ திசை வானோன் - அந்தத் திக்கில் [கீழ் திசையில்] உள்ளவனான தேவேந்திரனது, மிளிர் - விளங்குகிற, சென்னி சூளாமணி போல்-முடிவில் அணிந்தகிரீடம் போல, வந்தது-உதித்துவிளங்கிற்று; (எ-று.)-அம்மா-ஈற்றசை. புலம்பல் கேட்பவர்க்கு அவ்விடத்தைவிட்டு நீங்கக் கருத்துண்டாதல், இயல்பு.இயற்கையாக இரவுகழிந்ததற்கு இப்படிப் பட்டதொரு காரணத்தைக் கற்பித்துக்கூறியது - ஏதுத்தற்குறிப்பேற்றவணி. 'காலைச்சுடர் வந்தது' என்பதை நோக்கி,'அத்திசை' என்றது-கிழக்கைக் குறிக்கும்; செய்யுளாதலின் சுட்டு முன்வந்தது.'அத்திசை வானோன்' என்றது, கிழக்குத்திக்குப் பாலகனாகிய இந்திரனை.சூளாமணி-சூடாமணி என்னும் வடசொல்லின் போலி; தலையில் அணியும் இரத்தினமென்று பொருள்: சூடா-தலை. சூரியனைக் காலைச்சுடரென்றும், சந்திரனைமாலைச்சுடரென்றுங் கூறுதல் ஒரு மரபு. பி-ம்:- வானோர். (181) நான்காம்போர்க்கருக்கம் முற்றிற்று. --------- ஐந்தாம்போர்ச்சருக்கம். 1.-கடவுள்வாழ்த்து. கருமாமு கிற்கோல நெஞ்சத்தி ருத்துங்க ருத்தெய்துமேல் அருமாத வன்றானு மவன்முத்தி தருகைக்கு மவனேகுரு தருமாலை மணநாறு தாளானை வண்டேறு தண்ணந்துழாய் மருமாலை புனைகின்ற திருமாலை யல்லாது வல்லார்கள்யார். |
(இ-ள்.) கரு - கருநிறமான, மா-அழகிய, முகில் - மேகம் போன்ற, கோலம்-(திருமாலின்) திருமேனியை, நெஞ்சத்து-(தன்) மனத்திலே, இருத்தும் - பதியவைக்கிற, கருத்து-எண்ணம், எய்தும் ஏல்-(ஒருவனுக்கு) உண்டாகுமானால், அரு மா தவன்தான் உம் அவன்-(பிறராற்செய்தற்கு) அரிய பெரிய தவத்தைச் செய்தவனும் அவனே; முத்தி தருகைக்குஉம் அவன்ஏ குரு - (தன்னை அடைந்தவர்களுக்குப்) பரமபதத்தைக் கொடுத்தற்கும் அவனே ஞானசிரியனாவன்; (ஆதலால்),- தரு - கற்பகவிருட்சத்தின் மலர்களாலாகிய, மாலை-மாலைகளின், மணம்-வாசனை, நாறு-மணக்கப் பெற்ற, தாளானை-திருவடிகளையுடையவனும், வண்டு ஏறு-வண்டுகள் மொய்க்கின்ற, தண்-(தேனினாற்) குளிர்ந்த, அம் - அழகிய, மரு-வாசனையையுடைய, துழாய் மாலை - திருத்துழாய்மாலையை, புனைகின்ற- தரிக்கிற, திருமாலை அல்லாது - திருமாலென்னுந் திருநாமமுடையவனு மாகிய ஆதிதேவனை யல்லாமல், வல்லார்கள்- சிறந்தகடவுளர், யார்-யாவர் (உளர்)? (எ-று.) திருமாலினது வடிவத்தை ஒருகால் தியானிப்பவன், அரும்பெருந்தவஞ்செய்தவனும், தன்னையடைந்தவர்களுக்கு முத்திதர |