பக்கம் எண் :

ஐந்தாம் போர்ச்சருக்கம்141

12.ஈமந்தொ றுஞ்சென்று நடமாடு கழலைய னெதிராய்வருங்
காமன்ற னுடன்மேல்வி ழித்திட்ட நுதலிற்க னற்கண்ணெனத்
தாமம்பு னைந்தார மணநாறு மார்பத்த டந்தோயவே
வீமன்றொ டுத்தானொ ரெதிரம்பு பார்மன்னன் மிடல்சாயவே.

     (இ-ள்.) ஈமம் தொறும் - மயானங்களிலெல்லாம், சென்று-போய், நடம் ஆடு
- கூத்தாடுகிற, கழல் - சீர்பாதங்களையுடைய, ஐயன்-தலைவனான சிவபிரான், எதிர்
ஆய் வரும் காமன்தன் உடல் மேல் விழித்திட்ட-எதிரியாய் (ப் போருக்கு) வந்த
மன்மதனது உடம்பை இலக்காகக் கொண்டு அதன்மேல் விழித்துப்பார்த்த, நுதலில்
கனல் கண் என - நெற்றியிலுள்ள நெருப்புக்கண்போல,-தாமம் புனைந்து ஆர
மணம் நாறும் மார்பம் தடம் தோய-மாலைகளைத் தரித்து மிகவாசனைவீசுகிற
மார்பினிடத்திலே பதியவும், பார் மன்னன் மிடல் சாய-பூமியை ஆளும் அரசனான
அத்துரியோதனன் (அதனால்) வலிமைகெடவும், வீமன்-வீமசேனன், ஓர் அம்பு
எதிர் தொடுத்தான்-ஒருபாணத்தை எதிரிலே செலுத்தினான்.

     சிவபிரான் வீமனுக்கும், நெற்றிக்கண் அம்புக்கும், மன்மதன்
துரியோதனனுக்கும், அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய தொழில்பற்றி உவமை.
சர்வசங்காரகாலத்தில் எல்லாப்பிராணிகளும் அழியப்பெற்ற உலகமுழுவதும்
இடுகாடுஆவதனால், அவ்விடம் முழுவதிலும் அப்பொழுது சிவபிரான் உமாதேவி
கண்டுஉள்ளம் மகிழும்படி திருநடனஞ் செய்கின்றன ரென்பது, சைவசம்பிராதாயம்.
நடம்- வடசொல். ஆரம் மணம் நாறும் என எடுத்து, சந்தனக்குழம்பு கமழப்பெற்ற
எனினுமாம். ஒரேதிரம்பு - துரியோதனன் தானாகவந்து விட்ட பல அம்புகளுக்கு
மாறாகச்செலுத்தப்பட்ட ஒரு அம்பு. (193)

வேறு

13.-வீமன்மீது பூரிசிரவா வந்து பொருதல்.

ஓரம்பினு ளைந்தேழுல குடையானல மரவே
வீரம்புனை வீமன்குனி வில்லோடெதிர் நிற்கப்
போரம்பர வுலகாள்பவர் புகழ்பூரிச வாவந்
தீரம்புதொடு த்தானொரு தேர்மேலின னிவன்மேல்.

     (இ -ள்.) ஏழ் உலகு உடையான்-ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதையும்
தனதாகவுடைய துரியோதனன், ஓர் அம்பின் உளைந்து அலமர - (தனது) ஒரு
அம்பினால் வருந்திக்கலங்கும்படி (செய்து), வீரம் புனை வீமன் -
வீரத்தன்மையைப்பெற்றுள்ள வீமசேனன். குனி வில்லோடு எதிரி நிற்க -
வளைந்தவில்லுடனே எதிரில்நிற்க,-(அப்பொழுது),- அம்பரம் உலகு ஆள்பவர் -
ஆகாயத்திலுள்ள சுவர்க்கலோகத்தை அரசாளுகிற (இந்திரன் முதலிய)
தேவர்களால், போர் புகழ் - யுத்தத்திற் புகழப்படுகிற, பூரிசவா - பூரிசிரவசு
என்னும் அரசன், ஒரு தேர் மேலினன் வந்து - ஒருதேரின்மேல் ஏறினவனாய்
வந்து, இவன்மேல் ஈர் அம்பு தொடுத்தான் - இவ்வீமன்மேல் இரண்டு
பாணங்களைச் செலுத்தினான்;(எ-று.)