போது - அப்பொழுது, அனிகத்தோடும் - சேனைகளுடனே, ஒருவா - (போர்க்களத்தை நீங்கி, அகல் பாசறை புக்கார் - விசாலமான படைவீட்டை அடைந்தார்கள்; (எ - று,) 'படை செம்புனல் கடலுண்டது கால்வார்' என்ற பாடத்துக்கு - ஆயுதங்களாற்கடல்கொள்ளும்படியான [மிக அதிகமான] இரத்தத்தைப் பெருக்குபவர்களும் என்க.அகல்+பாசறை=அகன்பாசறை; குறில்செறியாலள" என்னுஞ்சூத்திரத்து 'பிற' என்றமிகையால் அமைக்கப்படும். (205) 25-மறுநாள் சூரியோதய வருணனை. இரவென்றிருள் கெழுநஞ்சினி ளந்திங்களெ யிற்றோ ராவுண்டது தான்மீளவு மிழ்ந்தென்னவ ருக்க னுரவுங்குட் திசைநீனிற வுததிக்குளொ ளித்தோன் விரவுங்குண திசைவேலையின் மிசைவந்துகி ளர்ந்தான். |
(இ-ள்.) இருள் - இருட்டாகிய, கெழு நஞ்சின் - மிகுந்த விஷத்தையும் இள திங்கள் - கலைகுறைந்த (பிறைச்) சந்திரனாகிய, எயிறு - கோரப்பல்லையுமுடைய, இரவு என்ற - இராத்திரியாகிய, ஓர் அரவு - ஒரு கரும்பாம்பினால், தான் உண்டு- தான் உண்ணப்பட்டு, அது மீள உமிழ்ந்து என்ன-அப்பாம்பினால் மறுபடி உமிழப்பட்டாற்போல, அருக்கன்-சூரியன், உரவுகுடதிசை நீல் நிறம் உததிக்குள் ஒளித்தோன் - வலிமையுடைய மேற்குத் திக்கிலுள்ள நீலநிறத்தையுடைய கடலிலே (முந்தினநாள் மாலைப்பொழுதில்) மறைந்தவன், விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் - பொருந்திய கிழக்குத்திக்கிலுள்ள கடலின் மேலே (மறுநாளுதயத்தில்) தோன்றி விளங்கினான்; (எ-று.) உண்ணப்பட்டாற்போல அஸ்தமித்தவன் உமிழப்பட்டாற்போல உதித்தனனென்பதாம்: சூரியன் சிலகாலத்தில் இராகுவென்னும் கரும்பாம்பாலுட்கொள்ளப்படுதலைக் கருதி. இங்ஙனம் கூறினார். உருவகவணியை அங்கமாகக்கொண்டுவந்த தன்மைத்தற் குறிப்பேற்றவணி. என்றிருள் - விகாரம். 'உரவுக்குடதிசை' என்பது-உரவுங்குடதிசை யென ஓசையின்பம் நோக்கிமெலித்தல்பெற்றது. நீல் - கடைக்குறை- பி-ம்: உமிழ்ந்தோனென. (206) ஐந்தாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. -------- ஆறாம்போர்ச்சருக்கம். 1.-கடவுள்வாழ்த்து. கோயிலா ளுடையபைங் கொண்டலார் கண்டுயில் பாயலாய் வாழநீ பாக்கியஞ் செய்ததென் தீயிலா துவமைவே றில்லெனத் தீயநின் வாயெலா நஞ்சுகால் வாளெயிற் றுரகமே. |
|