(இ-ள்.) தீ அலாது உவமை வேறு இல் என-அக்கனியல்லது வேறு உபமானம் இல்லை யென்று சொல்லும்படி, தீய நின்வாய் எலாம் நஞ்சு கால் - கொடிய உனது வாய்களெல்லாவற்றினின்றும் விஷத்தைக் கக்குகிற, வாள் எயிறு - வாள்போலக் கொடிய பற்களையுடைய, உரகமே-பாம்பே [ஆதிசேஷனே!], நீ- ,கோயில் ஆள் உடைய - திருவரங்கமென்னுந் திருப்பதியை ஆளுதலையுடைய பைங் கொண்டலார் - பசுநிறமான நீர்கொண்ட மேகம்போன்ற திருமால், கண் துயில் - அறிதுயில்செய்தருளப் பெற்ற, பாயல் ஆய் வாழ - படுக்கையாய் வாழ்வதற்கு, செய்தது பாக்கியம் என் - செய்துள்ள நல்வினைப்பயன் யாதோ? (எ-று.) மிகக்கொடிய பாம்புகளுக்கெல்லாம் அரசனும் நெருப்புப் போலத் தவறாது கொல்லவல்ல விஷத்தை எல்லாவாயினின்றும் உமிழ்பவனும் பயங்கரமான விஷபற்களை யுடையவனு மான நீ எம்பெருமானுக்குத் திருப்பள்ளி மெத்தையாவதற்குச் செய்த பாக்கியத்தை எளியவனான எனக்குக் கூறினால், கொடுந்தன்மையையுடைய யானும் அந்நல்வினையைச் செய்து அப்பிரான் அகத்தில்வந்து தங்கப்பெற்று உய்ந்திடுவேனென்பது குறிப்பு. அளவிறந்த நல்வினையைச்செய்திருந்தாலொழிய எம்பெருமான் இடைவிடாது தன்னிடத்தில் வந்துதங்கும்படியான பெரும்பேற்றைப் பெறுதல்கூடாதென்பதாம், திருமாலின் திருப்பதிகள் நூற்றெட்டனுள் முதலதான திருவரங்கத்துக்கு,வைஷ்ணசம் பிரதாயத்தில் 'கோயில்' என்று ஒரு பெயர். பசுமை கருமைநீலநிறங்களை (ச்சிறிதுவேறுபாட்டைக் கருதாமல்) அபேதமாகக்கூறுங் கவிகளது மரபுபற்றி, நீலமேகத்தை 'பைங்கொண்டல்' என்றார். பாயல், அல் - சாரியை, பாக்யம் - வடசொல். கோயில் - கோவில் என்பதன் இலக்கணப்போலி: கோ+இல்:சிறந்த இடம். இதுமுதல் பதினெட்டுக் கவிகள் - பெரும்பாலும் எல்லாச்சீர்களும் விளச்சீர்களாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (207) 2.-பாண்டவர், சேனையோடு போர்க்களங்குறுதல். பயிலும்வெம்பாசறைப்பாண்டவரைவருந் துயிலுணர்ந்தணிபசுந்துளபமாலடிபணிந் தயிலநஞ்சனையபோரடுகளங்குறுகினார் சயிலவெங்கடகரித்தானையுந்தாமுமே. |
(இ-ள்.) பாண்டவர் ஐவரும்-, பயிலும் வெம் பாசறை - (தாம்) பழகிய விருப்பத்திற் கிடனான படைவீட்டிலே, துயில் உணர்ந்து - தூக்க மொழிந்து எழுந்திருந்து, அணி பசு துளபம் மால் அடி பணிந்து - அழகிய பசுநிறமான திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானது திருவடிகளை வணங்கி, (அவனனுமதிப்படி அவனுடனே), சயிலம் வெம் கட கரி தானைஉம் தாம்உம்- மலைபோன்ற கொடிய மதயானைகளின் சேனைகளும் தாமுமாக, அயிலும் நஞ்சு அனைய அடு போர் களம் குறுகினார்-உண்கிற விஷத்தை யொத்த [மிகக்கொடிய] (பகைவரைக்) கொல்லும் போர்க் |