வீடுமன் அறத்தையே இன்பமுமாகப் பாவித்ததை, தந்தைக்கு மணஞ் செய்விக்கும் பொருட்டுத் தான் மணஞ்செய்வதை விட்டு இவ்வுலகவின்பத்தைத் துறந்ததனால் அறிக. அதன் பொருட்டு முன்னே இவன் தேவர்முன்னிலையில் செய்த சபதம் தவறாமல் உறுதிநிலையாயுள்ள தன்மையை நோக்கி, 'மெய்ப்புனிதன்'என்றார். (210) 5.-வீடுமன் தன்சேனையைக் கிரௌஞ்சவியூகமாக வகுத்தல். பொருஞ்சமங்கருதியாள்புரவிதேர்போதகந் தெரிஞ்சுகொண்டீரிருதிசையினுஞ்செல்லவே பெருஞ்சனந்தன்னையப்பீடுடைவீடுமன் கரிஞ்சமென்றுள்ளபேர்வியூகமுங்கட்டினான். |
(இ-ள்.) ஆள்-காலாட்களும், புரவி - குதிரைகளும், தேர்-தேர்களும், போதகம்-யானைகளும், பொரும் சமம் கருதி - பொர வேண்டும் போரை நினைந்து, தெரிஞ்சு கொண்டு-(தன் குறிப்பை) அறிந்துகொண்டு, ஈர் இரு திசையின்உம் செல்ல - நான்குதிக்குக்களிலும் பரவும்படி, பெரும் சனம் தன்னை-பெரிய அச்சேனைவீரர்களை, அ பீடு உடை வீடுமன்- பெருமையையுடையஅந்தப்பீஷ்மன், கரிஞ்சம் என்று பேர் உள்ள வியூகம்உம் கட்டினான் -கரிஞ்சமென்று பெயருடைய வியூகமாக அணிவகுத்தான்; (எ-று.) கரிஞ்சம்-க்ரௌஞ்சம் என்னும் வடமொழித் திரிபு போலும். அன்றில்,கிரௌஞ்சம் என்பன-ஒருபொருட்சொற்கள்; ஆதலால், கிரௌஞ்சவியூகமாக வகுத்தன னென்க. கிரௌஞ்சவியூகம்-அன்றிற்பறவையின் வடிவமாகச் செய்யப்படும் படைவகுப்பு. அப்பறவையின் வாயிடத்தில் துரோணனும்,கண்களில் அசுவத்தாமனும் கிருபனும், தலையில்: பல அரசர்களோடுகிருதவர்மாவும், கழுத்தில் பல அரசர்களோடு துரியோதனனும், மார்பில் பலஅரசர்களோடும் பெருஞ்சேனையோடும் பகதத்தனும், இடச்சிறகில் தன்சேனையோடு சுசர்மாவும், வலச்சிறகில் யவனர் முதலிய பல அரசர்களும், புறத்தில்சுருதாயுவும் சதாயுவும் சௌமதத்தியும் நின்றறர் என்று முதனூல் கூறும். அன்றில் -எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்பதும், கணப்பொழுது ஒன்றையொன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிட்டால் உடனே இறந்துபடுவதுமான ஒருவகைப்பறவை, கருதி, தெரிஞ்சுகொண்டு என்ற வினைகளுக்கு ஏற்ப, 'தேர்' என்றது-அதனை நடத்துபவரையே குறிக்கும் பி-ம்: தெரிந்து. (211) 6.-இருபடைவீரர்களும் நெருங்கிப்பொருதல். இந்திரன் முதலியவிமையவர்தங்களா லந்தரமிடனறவரவுளைந்தலமர வந்துவந்திருபெரும்படைஞருமாறுபட் டுந்தினார்முந்தனாரொட்டினார்முட்டினார். |
|