பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்157

16.-வீமன் துரியோதனனை அம்பெய்து வருத்துதல்.

வரத்தின்முன்பெறுகதைவன்மையும்வின்மையுஞ்
சிரத்தினின்றெண்ணவோர்பேர்பெறுஞ்சேவகன்
சரத்தினுங்கடுகுதேர்ச்சர்ப்பகேதனனையன்
றுரத்தின்வெங்கணைகள்பட்டுருவவில்லுதையினான்.

     (இ-ள்.) வரத்தின் - வரத்தினாலே, முன் பெறு - முன்னே பெற்ற, கதை -
கதாயுதத்தினது, வன்மைஉம் - வலிமையிலும், வின்மைஉம் - வில்லின்திறத்திலும்,
சிரத்தின் நின்று எண்ண - (தன்னைத்) தலைமையாகவைத்து (யாவரும்)
மதிக்கும்படி, ஓர் பேர் பெறும் - ஒப்பற்ற புகழைப் பெற்ற, சேகவன் - வீரனான
வீமன்,-அன்று - அப்பொழுது, சரத்தின்உம் கடுகு தேர் சர்ப்பகேதனனை -
(வில்லினின்று விடப்பட்ட) அம்பைக்காட்டிலும் விரைவாகவருகிற தேரையுடைய
பாம்புக்கொடியனான துரியோதனனை, உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ -
மார்பிலே கொடிய அம்புகள் பட்டு ஊடுருவும்படி, வில் உதையினான் -
வில்லினின்று (அம்புகளைச்) செலுத்தினான்; (எ-று.)

     காண்டவதகநகாலத்தில் அக்காட்டுத்தீயினின்று அருச்சுனனால் உயிர்
பிழைப்பிக்கப்பட்ட மயனென்னும் அசுரசிற்பி, பின்பு அவ்வுதவிக்குக்
கைம்மாறாக,பாண்டவர்களுக்கு இராசசூயயாகத்துக்குரிய ஒரு சிறந்த
இரத்தினமண்டபத்தை அமைத்துக் கொடுத்தது மன்றி, வீமசேனனுக்கு ஒரு
கதாயுதத்தையும்,அருச்சுனனுக்கு ஒரு சங்கத்தையும் கொடுத்தா னென்றவரலாறு
கொண்டு, இங்கே'வரத்தின்முன்பெறு கதை' எனப்பட்டது.

17.-வீமன், துரியோதனன் தம்பியரைப் புண்படுத்திப்
பலரையும் உயிர் வதைத்தல்.

தான்விடுங்கணைகளிற்றம்பியர்தம்மையுந்
தேன்விடுந்தெரியலானெய்துபுண்செய்துபின்
ஊன்விடும்படிதுளைத்துருவுபல்பகழியால்
வான்விடும்பேரையும்வானிலுய்த்தனனரோ.

     (இ-ள்.) (இவ்வாறு துரியோதனனை வருத்தியபின்பு),- தேன் விடும்
தெரியலான் - தேனைச்சொரிகிற பூமாலையையுடைய வீமன்,- தான் விடும்
கணைகளின் - தான் செலுத்தும் அம்புகளால், தம்பியர் தம்மைஉம் எய்து புண்
செய்து - (துரியோதனன்) தம்பிமார்களையுந் துளைத்துப் புண்படுத்தி,-பின் -
பின்பு,ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் - (பகைவருயிர்)
உடம்பைநீங்கும்படி (அவ்வுடம்பைத்) துளைசெய்து ஊடுருவுந்தன்மையுள்ள பல
பாணங்களால், வான் விடும் பேரைஉம் வானில் உய்த்தனன்-(அப்பொழுது)
வீரசுவர்க்கத்துக்குச் செலுத்தத் தக்கவர்களையும் அவ்விடத்துக்குச் செலுத்தினான்
[கொன்றான்]: (எ-று.)-அரோ - ஈற்றசை.