பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்159

விகர்ணனென்பவனும், ஆய முதிர் சினம் மூள - பழமையான முதிர்ந்த கோபம்
அதிகப்பட, விரைவுடன் மீளவர - வேகத்தோடு மறுபடி(போருக்கு) வர,
அபிமன்னுஉம் - அபிமநயுவும், தூய வரி சிலை வாளி கொடு - குற்றமில்லாத
கட்டமைந்த வில்லையும் (பல) அம்புகளையும் உடன் கொண்டு, தன தேர் கொடு -
தன்னுடைய தேர்மே லேறிக்கொண்டு, அவன் எதிர் துன்னினான்-
அவ்விகர்ணனெதிரிலே சென்றுசேர்ந்தான்; (எ-று.)

     இவர்கள், கீழ்த் துரியோதனனோடுவந்து வீமனோடு
எதிர்த்துத்தோற்றவராதலால்,'மீளவர' என்றார். விகன்னன்-விகர்ணன்;
வடசொல்திரிபு; இவன் துரியோதனனது இளையதம்பியரில் ஒருவன்; இராவணன்
தம்பியருள் விபீஷணன் போல, நீதிகளை நன்குஉணர்ந்து நடுவுநிலைமையோடு
நியாயவழியையே பேசுகிற நற்குணமுடையவன். கீழ்ச் சூதுபோர் நடந்தகாலத்தில்
துரியோதனனேவலால் துச்சாசனன் திரொளபதியை முடிபிடித் திழுத்து வந்த
பொழுதும் இவன் நீதியையெடுத்துக் கூறினான்; பின்பு கிருஷ்ணன் தூதுவந்த
சமயத்தில், துரியோதனனும் திருதராட்டினனும் அவனைக் கொல்லும்படி
ஆலோசித்தபொழுதும், இவன் தகுதியன்றென மறுத்தான்; இந்நற்குணம்பற்றியே,
மேல் யுத்தத்தில் வீமன் இவனைச் சபதப்படி விதியாற் கொல்லவேண்டிய
பொழுதும் மிக இரங்குவன்: இவனது நல்லுணர்வை நன்கு மதித்து, கவி இவனை
அடுத்த பாட்டில் 'ஞான விகனன்' என்பர்; இப்படிபட்ட சிறப்புடையவ னாதலால்,
இவனை மற்றையோரினும் பிரித்தெடுத்து இங்கே தலைமையாக்கிக் கூறினார்.
இவனுக்கு வீமனிடத்துக் கோபம் இயல்பாகவுள்ளதன்று, தன் தமையனான
துரியோதனனுக்குச் சோற்றுக்கடன் கழிக்கும்பொருட்டாக ஆகியது என்பது
தோன்ற, ' ஆயமுதிர்சினம்' எனப்பட்டது. 'மேய விழியிலையாயபதி தரு' என்ற
அடைமொழி-வீரர்பலர்க்கும் விகர்ணனுக்கும் உரியது. ஏய=ஏவிய: மேய=மேவிய.
மூன்றாம் அடியின் முதலில் 'மாய, எனப் பிரித்து, பகையழிய என்றும், மாயம்
எனப் பிரித்து, முதிர் மாயம் சினம் - மிகுந்த பொய்க் கேபம்
[செயற்கையாகக்கொண்ட கோபம்] என்றும் கூறினுமாம். பி - ம்: அவரெதிர்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக் கவிகள் - பெரும்பாலும்
ஒன்றுமூன்றுஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களு மாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.             (225)

20.- அபிமன்யு விகன்னனுடைய தேர்முதலியவற்றை அழிக்கை. 

மானவபிமனுஞானவிகனனைவாளிபலபலவேவமே
லானவிரதமுமாவும்வலவனுமாழிகளுமுடனற்றபின்
தானவிரதமுறாமல்விசையொடுதத்தியருகுறுசித்திர
சேனனெனுமிளையோனதணிபெறுதேரின்மிசைகடிதேறினான்.

     (இ-ள்.) மானம் அபிமன்உம்-பெருமையையுடைய அபிமந்யுவும், ஞானம்
விகனனை - நல்லறிவுடைய விகர்ணனை, பல பல வாளி