"இற்றைக்கு மூவைந்தா நாளி லிகலமருட், கொற்றப்போர் மன்னவனே கூசாதே -வெற்றிகொளும், பாஞ்சாலன் புத்திரன் கைப்படுவேனென்றுரைத்தான் றான்சாயுமாறே தரித்து" என்றார் பெருந்தேவனாரும். 'தன்பெருஞ்சாபம்' என்றது, தன்தந்தையான துருபதன் துரோணனைக் கொல்லும்பொருட்டு ஒருபுத்திரனுண்டாகவேண்டுமென்று செய்த யாகத்தில் தான் தோன்றிநின்றதை. இதனை 'சாபம்' என்றது, பிறனையழித்தலாகிய பயனைத் தவறாது விளைத்தலாலாம். வன்புடன் - துரோணனான என்மீது தந்தை தொடங்கி வருகிற தீராப்பகைமையுடனேயென்றும் உரைக்கலாம். பெருங்கருத்து - துரோணனையழித்தல். பாண்டவர்க்கு வெற்றியை விளைத்தல், பூபார நிவ்ருத்தி. சாபம் - வடசொல்திரிபு; "சாபமே சபித்தல் வில்லாம்" என்னும் நிகண்டினால் இருபொருளு முடையதாதலை அறிக. விட்டியான்- குற்றியலிகரம். வன்பு - பண்புப்பெயர். (பிராணிகளதுஉடம்பையும் உயிரையும் வேறுவேறாகப் பிரித்துக்) கூறுபடுத்தல்பற்றி, யமனுக்குக் கூற்றென்று பெயர்; இனி, (பிராணிகளின் ஆயுட்காலத்தைக்) கூறாக்கி வரையறைசெய்தல்பற்றிய பெயருமாம். யமன் தவறாது அழித்தற்கு உவமை. (15) 16.-யுதிஷ்டிராதியர் தம்படைத்தொகுதியைச் சேர்தல். முனிவனைவிடைகொண்டேகிமுகுந்தனுந்தாமுமுன்னம் தனிவனந்திரிந்துமீண்டோர்தானையங்கானிற்புக்கார் பனிவனநிறைந்தபொய்கைக்கரைநிழற்பரப்புந்தேமாங் கனிவனமென்னயார்க்குமுதவிகூர்கருணைக்கண்ணார். |
(இ-ள்) (பின்பு), பனி வனம் நிறைந்த பொய்கை கரை-குளிர்ச்சியையுடைய நீர் நிரம்பின குளத்தினது கரையிலே, நிழல் பரப்பும் - நிழலைப் பரவச்செய்கிற, கனி தேமா வனம் என்ன - பழங்களோடு கூடிய தேமாமரத்தோப்புப்போல, யார்க்குஉம் உதவிகூர் - யாவர்க்கும் நன்றிசெய்தல் மிகுந்த, கருணை கண்ணார்- அருளோடுகூடிய நோக்கத்தை யுடையவர்களாகிய, முகுந்தன்உம் முன்னம் தனி வனம் திரிந்து மீண்டோர் தாம்உம் - கண்ணபிரானும் முன்னே ஒப்பற்ற காட்டில் அலைந்து திரும்பிவந்த பாண்டவர்களும், முனிவனை விடை கொண்டுஏகி -- துரோணனிடத்து உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று, தானை அம் கானில் புக்கார்- அழகிய (தமது) சேனையாகிய காட்டினுள்ளே சென்றார்கள்; (எ - று.)-க்ருபன் சல்லியன் இவர்களையும் கிட்டி யுதிஷ்டிராதியர் அவர்களாசியும் அனுக்கிரகமும்பெற்று மீண்டனரென்று வியாசபாரதம் கூறும். தன்னிடம்வந்தவர் யாவராயினும் அவர்களின்விடாய் தணியும்படி நீர்பருகி வீற்றிருத்தற்குத் தண்ணிழலையும் பசிதீர உண்ணுதற்கு இனியகனியையும் அளித்து உதவும் பொய்கைக்கரை மாம் பொழில்போலப் பகைவர் நண்பர் அயலார்என்னும் பேதங் கருதாது தம்மைவந்தடைந்தவர் யாவர்க்கும் பலவகையாலும் உதவி செய்பவர் இவரென்பார், இங்ஙனங் கூறினார். "பயன் மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ, நயனுடை யான்கட் படின்" என்ற திருக்குறளையும், "நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க, படுபனை யன்னர் பலர்நச்சவாழ்வார்," "அழல்மண்டு போழ்தி னடைந்தவர்கட் |