48.-அதுகேட்ட திருதராஷ்டிரன் கண்ணீர்வடியவாடுதல். முனியுநகரிற்சென்றுமுகுரானனனுக்குரைப்பக் கனியுமன்பின்வெள்ளங்கண்ணீராகிச்சொரிய இனியென்மைந்தர்க்குறுதியில்லையென்றென்றேங்கிப் பனிவெண்மதியங்கண்டபங்கயம்போலானான். |
(இ-ள்.) (அவ்வாறே), முனிஉம்-சஞ்சயனும், நகரில் சென்று-அஸ்தினபுரத்திற் போய், முகுரானனனுக்கு உரைப்ப-திருதராட்டிரனுக்குச் செய்திசொல்ல, (அதுகேட்டவுடனே அவன்), கனியும் அன்பின்-(வீடுமனிடத்து) நெஞ்சுருகிய அன்பினால், கண்ணீர் வெள்ளம் ஆகி சொரிய-, இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்று என்று - இனிமேல் என்பிள்ளைகளுக்கு வலிமையில்லையென்று பலமுறைசொல்லி, ஏங்கி-விசனப்பட்டு, பனிவெண் மதியம் கண்ட பங்கயம்போல் ஆனான்-குளிர்ந்த வெண்ணிறமான சந்திரனைப் பார்த்த தாமரைமலர்போ லாயினான் [வாடி மெலிந்தான்]; முகுராநநன் என்ற வடமொழிப்பெயர்க்கு-கண்ணாடிபோன்ற முகமுடையவ னென்று பொருள். முகுரம்-கண்ணாடி, ஆநநம்-முகம். கண்ணாடி தான் பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சி யில்லாதது போல, தான் பிறராற் காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற் பிறரைத் தான் காணாத முகத்தையுடையவனென்றவாறு; இனி, கண்ணாடி போல விளக்கமுடைய முகமுடையனென்றுமாம். ''வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர் பெற்ற, முகத்தவன்'' என்றார் கலித்தொகையிலும். பி-ம்: என்றென்றிரங்கி. (372) 49.-திருதராஷ்டிரன் பெருஞ்சோகமடைந்து கதறுதல். மண்மேல்விழுந்தானெழுந்தான்மானம்போனதென்றான் கண்மேலெற்றியின்றேகண்ணுமிழந்தேனென்றான் விண்மேலுள்ளோர்செல்வம்வீறுபெற்றதென்றான் புண்மேலனலுற்றென்னப்புலர்ந்தான்முதல்வன்புதல்வன். |
(இ-ள்.) (பின்பு), முதல்வன் புதல்வன் - (குருகுலத்துப்) பெரியவனானவீடுமனுக்கு(த்தம்பி) மகனான திருதராஷ்டிரன், மண்மேல் விழுந்தான்- தரையிலே விழுந்திட்டான்; எழுந்தான்-; மானம் போனது என்றான் - (எனது) பெருமையழிந்தது என்று சொன்னான்; கண்மேல் ஏற்றி-(தன்) கண்மேல் (கையால்) மோதிக்கொண்டு, இன்றுஏ கண்உம் இழந்தேன் என்றான்-இன்றைக்கே (நான்) கண்ணையுமிழந்தே னென்று கூறினான்; விண்மேல் உள்ளோர் செல்வம் - தேவலோகத்திலுள்ளோரது ஐசுவரியம், வீறுபெற்றது - (வீடுமன் இனி அனுபவிக்கப்பெறுதலால்) சிறப்புப்பெற்றது, என்றான் - என்றுஞ் சொன்னான்; புண்மேல் அனல் உற்று என்ன புலர்ந்தான்-புண்ணின் மேல் நெருப்புப்பட்டாற் போல மிகவருந்தினான்; (எ-று.) |