மாசிலாவிறலுத்தரன்றிறன்மத்திராதிபனுடனுடன் றாசிலாவடலப்புமாமழைசிந்தினான்முகிலஞ்சவே. |
(இ - ள்.) அபிமன்னுவும்-, ஏசு இலாது உயர்-குற்றமில்லாமல் [மிக்க புகழ்பெற்று] சிறந்த, தன்பிதாவின்-தனது தந்தையான அருச்சுனனது, எழில் பிதாமகன்-அழகிய (பெரிய) பாட்டனான வீடுமன், ஏறு-ஏறியுள்ள, தேர்-இரதத்திற் பூட்டிய, வாசி நால்உம்-குதிரைகள் நான்கும், வாளியால் விழ தொடுத்தனன் - (தனது) அம்பினால் இறந்துகீழ்விழும்படி யெய்தான்; மாசு இலா விறல் உத்தரன்- குற்றமில்லாத வெற்றியையுடைய உத்தரகுமாரன், திறல்மத்திர அதிபனுடன் உடன்று -வலிமையையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனோடு பொருது, முகில் அஞ்ச-மேகமும் அஞ்சும்படி, ஆசு இலா அடல் அம்பு மா மழை சிந்தினான்-குற்றமில்லாத வலிமையையுடைய மிக்க பாணவருஷத்தைச் சொரிந்தான்; (எ-று.) "பேரொலிநீர்க் கங்கை பெருஞ்சிறுவன் றேர்பூண்ட, போரொலிமா நான்கினையும் பொன்றுவித்தான்-கூரிய, வேல்வண்ணன் போர்முகத்து வெவ்வாளி நான்கினான், மால்வண்ணன்றங்கை மகன்" என்பது வெண்பாப்பாரதம். முன்னே உத்தரகோக்கிரகண காலத்துத் துரியோதனாதியர் சேனையைக் கண்டவளவிலே அஞ்சிக்குதித்தோடின உத்தரகுமாரன் பின்பு அருச்சுனனருளால் அஸ்திரசஸ்திரசாஸ்திரப் பயிற்சியில் மிகச்சிறந்தவனாயின னென்பது தோன்ற, 'மாசிலா விறல்' என்றார். விறலுக்கு மாசு-போரிற் பின் வாங்குதல். உடலல்-இங்கே, போர் செய்தல். அம்பு என்னும் மென்றொடர், வன்றொடராயிற்று. 'அப்புமழை' என்றதில், 'முகிலஞ்ச' என்றதற்குஏற்ப, நீர்மழையென்ற பொருளுந் தொனிக்கும்; அம்பு என்றும், அப்பு என்றும் வடமொழியில் நீருக்குப் பெயர். தனது இடைவிடாப்பெருமழையும் இந்தப் பாணமழைக்கு ஈடாகாதென முகில் அஞ்சுமென்க.அப்பு மழையென்ற தொடரை-பாணங்களாலாகிய மழையெனவாயினும்பாணங்களாகிய மழையெனவாயினும் விரிக்க: மென்றொடர் இருவழியிலும்வன்றொடராம். அம்புக்குக் குற்றம் - குறித்த இலக்குத்தவறுதலும், அவ்விலக்கைஅழியாதுவிடுதலும்.பி - ம:் 'வாளிநால்.' (39) 40.-சல்லியன் உத்தரனைக் கொல்லுதல். வாவிமேல்வருபுரவிவீழவும்வலவன்மற்றுளார் ஆவிவீழவுமவனெடுத்தவிலற்றுவீழவுமமர்செய்தான் பாவியோடினிவில்லெடுப்பதுபாவமென்றொருபாரவேல் ஏவினானெதிர்சென்றுசல்லியனிவனும்வானகமேறினான். |
(இ - ள்.) (இங்ஙனம் உத்தரன் அம்புமழை பொழிந்து), வாவி மேல் வரு புரவி வீழஉம் - தாவிக்கொண்டு (தன்மேல்) வருகிற (சல்லியனது) தேர்க்குதிரைகள் இறந்துவிழவும், வலவன் வீழஉம்-(அவனது) தேர்ப்பாகன் இறந்துவிழவும், மற்று உளார் ஆவிவீழஉம் - (தேர்காப்பவர் முதலாக) மற்றும் (அவனுக்குத் துணையாக) உள்ள வீரர்களது உயிர் அழியவும், அவன் எடுத்த வில் அற்று வீழஉம் - அச்சல்லியன் கையிலேந்தியுள்ள வில் துணி |