(இ - ள்.) இருவர்உம் - (சல்லியன் சுவேதன் என்னும்) இவ் விரண்டுபேரும், இவர்க்கு ஒருவர்உம் நிகர் இல்லை என-இவர்களுக்கு ஒருத்தரும் ஒப்பில்லை யென்று சொல்லும்படி, உற்று மலைந்திட- மிகுதியாகப் போர்செய்ய, (அப்பொழுது), இராச குலராசன் - அரசர்களுடைய கூட்டத்திற்குத் தலைவனாகிய துரியோதனன், பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று - (அப்போரில்) இளைப்பையடைகிற மத்திரதேசத்தரசனான சல்லியனுக்குச் சகாயமாகக்கடவரென்று, அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் - அழித்தற்கரிய மலையோடு சமானமான தோள்களை யுடையவர்களான (தனதுதம்பிமார்கள்) ஆறுபேரைத் துணையனுப்பினான்; (எ - று.) இவர்கள் துரியோதனன்தம்பிய ரென்பது, அடுத்தகவியில் "தரணிபதி தம்பியர்கள்" என்பதனால் விளங்கும். ஆயுதங்களால் அழிக்கமுடியாத வலிமையிலும், பருமையிலும், உயர்ச்சியிலும், மலை-தோளுக்கு உவமை. 'இராசராசன்' என்று துரியோதனனுக்கு ஒரு பெயர். பருவரல் - வருந்துதல்; பருவா -பகுதி, உதவி - உதவிசெய்பவர்க்குத் தொழிலாகுபெயர். (51) 52.-மூன்றுகவிகள் - சுவேதன் எதிர்த்துவந்தவரை வென்றமை கூறும். தரணிபதிதம்பியர்கடானையொடுவந்தே யிரணமுகமொன்றுமயிலோனெனவெதிர்த்தார் திரணறைகொடார்புனைசிவேதனவரந்தக் கரணம்வறிதாகும்வகைகணைபலதொடுத்தான். |
(இ-ள்.) தரணிபதி தம்பியர்கள் - (இங்ஙனம் அனுப்பப்பட்ட) பூமிக்குத்தலைவனான துரியோதனனது தம்பிமார்கள், தானையொடு - சேனையுடனே,இரணம் முகம் ஒன்றும் மயிலோன் என- போர்க்களத்தினிடத்தை யடைகிறமயிலை(வாகனமுங் கொடியுமாக) உடைய முருகக்கடவுள்போல, வந்து எதிர்த்தார்-;(அப்பொழுது), திரள் நறை கொள் தார் புனை சிவேதன் - திரண்ட தேனைக்கொண்ட பூமாலையைச் சூடிய சுவேதன். அவர் அந்தக்கரணம் வறிது ஆகும்வகை-அவர்களது மனம் அழியும்படி, கணை பல தொடுத்தான் - அநேக பாணங்களை (மேன்மேல்) பிரயோகித்தான்; (எ - று.) தம்பியர் அறுவரும் உடலாற்பலராயினும் மனத்தால் ஒருவரேயாதலாலும், சுப்பிரமணியமூர்த்தி உருவம் பலவாயினுந் தாம் ஒருவரேயாதலாலும், இவ்வுவமை ஏற்கும். முருகக்கடவுளுவமை பல பராக்கிரமங்களோடு ஆறுவடிவமாக வருதற் கென்க. சுப்பிரமணியனது வடிவம் ஆறுகூறாகச்சென்றது, சூரபதுமனை அழித்த பொழுதென்க; இங்கே "அறுவேறு வகையினஞ்சுவரமண்டி" என்ற திருமுருகாற்றுப்படை காண்க. அயிலோனெனப் பிரித்து, வேலாயுதத்தையுடையவனெனக் கொள்ளலுமாம்; 'வேலன்' என்று சுப்பிரமணியனுக்கு ஒருபெயர். வறிதாகும்வகை- வறுமையுடையதாகும்படி; எண்ணஞ் சிறிதும் இல்லாமற் கலங்கும்படி; இடைவிடாது எய்த |