பக்கம் எண் :

50பாரதம்வீட்டும பருவம்

57.வீடுமனுமீளவொருவிற்கொடுசிவேதன்
சூடுமுடிவீழவொருசுடுகணைதொடுத்தான்
கோடுசிலைவாளிபலகொண்டிவனவன்றேர்
நீடுகொடியாடையைநிலத்துறவிழுத்தான்.

     (இ - ள்.) (அப்பொழுது), வீடுமனும்-, மீள ஒருவில்கொடு-மறுபடி ஒருவில்லை
யெடுத்துக்கொண்டு, சிவேதன் சூடு முடி வீழ-சுவேதன் தரித்துள்ள கீரிடம்
கீழ்விழும்படி, ஒருசுடு கணை தொடுத்தான்- உக்கிரமான ஒரு அம்பை எய்தான்;
இவன் - இந்தச்சுவேதன், கோடு சிலை வாளி பல கொண்டு - வளைத்த
வில்லினின்றுஎய்த பல அம்புகளால், அவன் தேர் நீடுகொடி ஆடையை -
அவ்வீடுமனது தேரிற்கட்டிய உயர்ந்த (பனைக்) கொடிச்சீலையை, நிலத்துஉற -
தரையிலே விழும்படி,விழுத்தான் - அறுத்துத் தள்ளினான்; (எ - று.)-
நிலத்துறவழித்தான்' என்றும் பாடம்.

     சுடுகணை - வினைத்தொகை; பகைவரை நெருப்புப்போல அழிக்க வல்ல
அம்பென்க: நெருப்பில்வைத்துக்காய்ச்சிவடித்த அம்பெனினுமாம்.      (57)

58.பின்னையுமவன்றனிபிடித்துவருசாபந்
தன்னையுமிவன்பலசரங்கொடுதுணித்தான்
மின்னையுநகும்பகழிவீடுமன்வெகுண்டாங்
கென்னவமர்செய்வதினியென்றுதளர்வுற்றான்.

     (இ - ள்.) பின்னைஉம் - (கொடிச்சீலையை யறுத்ததுமாத்திரமே யன்றிப்)
பின்னும்,இவன்-சுவேதன், அவன் தனி பிடித்து வரு சாபந் தன்னைஉம்-வீடுமன்
ஒப்பில்லாமற் கையிலேந்திவந்த அவ்வில்லையும், பல சரம்கொடு துணித்தான்-
அநேகபாணங்களால் அறுத்துத்தள்ளினான்;  மின்னைஉம்நகும் பகழி வீடுமன் -
(ஒளியால்) மின்னலையும் இகழ்ந்துசிரிக்கும்படியான அம்புகளையுடைய வீடுமன்,
ஆங்கு - அப்பொழுது, இனி வெகுண்டு என்ன அமர் செய்வது என்று தளர்வு
உற்றான் - 'இனிமேல் (நாம் இவனோடு) கோபித்து என்ன போர்செய்வது?' என்று
சோர்வையடைந்தான்; (எ - று.)

     வீடுமன் இரண்டுமுறை வில்லெடுக்க, அவ்விரண்டுமுறையும் அவன் வில்லைச்
சுவேதன் உடனே அறுத்ததனால், இனி இவனோடு விற்போர்செய்யமுடியா தென்று
கருதி மனந்தளர்ந்து, எங்ஙனம் போர்செய்வ தென்றனன் என்பதாம். நகுதல் -
பரிகசித்தல். ஆங்கு - அதனா லென்றுமாம். மின்னையும், உம்மை - உயர்வுசிறப்பு;
அதன் ஒளிமிகுதியை விளக்கும். பி - ம்:-பிடித்தவரிசாபம்.            (58)

59.-துரியோதனன் சொல்லினால் பல அரசர் பக்கபலமாக வீடுமனைக்
கிட்டுதல்.

தளர்ந்தநிலைகண்டுதுரியோதனனரும்போர்
விளைந்ததுசிவேதனுடன்வீடுமனிளைத்தான்
இளந்தலையுறாதபடியேகுமினெனப்போய்க்
கிளர்ந்தமுடிமன்னர்பலர்கிட்டினர்விரைந்தே.