பெரிதாக விசுவரூபமெடுத்து அதற்குத்தப்பி மீண்டு பாண்டவரிடம்வந்து அங்குநடந்தசெய்திகளை யெல்லாந் தெரிவித்தருளினான். பின்பு, பாண்டவர் ஏழு அகௌஹிணிசேனையையும், கௌரவர் பதினொரு அகௌஹிணிசேனையையுந் திரட்டிக்கொண்டு, குருக்ஷேத்திரத்தில் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய ஆயத்தமாயினர். 1.--கடவுள் வாழ்த்து மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி மூவரு மாகி யந்த மூவர்க்குண் முதல்வ னாகி யாவரும் யாவு மாகி யிறைஞ்சுவாரிறைஞ்சப் பற்ப றேவரு மாகி நின்ற செங்கண்மா லெங்கள் கோவே. |
(இதன் பொருள்.) மேவு அரு - அடைதற்கு அருமையான, ஞானம் ஆனந்தம் வெள்ளம் ஆய் - ஞானம் ஆநந்தம் என்னும் இவற்றின் மிகுதிமயமாய், விதித்தோன்ஆதி மூவர்உம் ஆகி - படைத்தற்றொழிற் கடவுளான பிரமன் முதலியதிரிமூர்த்திகளுந்தானாய், அந்த மூவர்க்குள் முதல்வன் ஆகி - அத்திரிமூர்த்திகளுள்ளுந் தலைவனாய், யாவர்உம் யாஉம் ஆகி - எல்லாவுயர்திணைப் பொருள்களும் எல்லா வஃறிணைப் பொருள்களுமாய், இறைஞ்சுவார் இறைஞ்ச பல் பல் தேவர்உம் ஆகி - (தந்தம்மை) வணங்குதற்குரியவர்கள் வணங்கும்படி (அந்தந்த மதத்துக்குரிய) பலபல தேவர்களின் வடிவமுமாய், நின்ற - (என்றும் அழியாது) நின்ற, செம் கண் மால் - சிவந்த திருக்கண்களையுடைய திருமால், எங்கள் கோ - எங்களுக்குத் தலைவனாவன்; (என்றவாறு.) வீட்டுமபருவம் தொடங்கப்போவதால், கடவுள்வாழ்த்து முதலிற் கூறுகின்றார். ஞானவெள்ளமாய் என்றது - எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும் அறிவின்மிகுதியையுடையவனாயென்றபடி. ஆனந்த வெள்ளமாய் என்றது. எல்லாவின்பங்களினும் மேம்பட்ட நிரதிசயப்பேரின்பத்தையே எப்பொழுதும் உடையவனாயென்றபடி. மனமொழிமெய்களுக்கெட்டாத பேரறிவு பேரின்பங்கள், இங்கு 'மேவருஞானானந்தவெள்ளம்' எனப்பட்டன. விதித்தோனாதிமூவருமாகி என்றது, பிரமருத்திரர்க்கு அந்தராத்மாவாய் நின்று அவர்களைக் கொண்டு படைத்தல் அழித்தல் தொழில்களை நிகழ்த்தித் திருமால் தானான நிலையில் நின்று காத்தற்றொழிலைப் புரிந்தருளுதலால்; "ஆக்குமாறயனா முதலாக்கிய வுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங் கடலாம், வீக்குமாறரனாமவை வீந்தநாள் மீளப், பூக்குமாமுத லெவனவன்பொன்னடிபோற்றி" என இந்நூலின்முதற் கடவுள் வாழ்த்திலுங் கூறினார்: "நான்முகனை நாராயணன் படைத்தானான்முகனுந், தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்" என்ற சித்தாந்தத்தின்படி திரிமூர்த்திகளுள்ளும் மற்றையிரு மூர்த்திகளுக்குங் காரணமாகிய மூர்த்தி திருமா லாதலால், 'அந்த மூவர்க்குண்முதல்வனாகி' என்றார்: "முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர்வண்ணன்" என்றார் பொய்கையாழ் |