பக்கம் எண் :

90பாரதம்வீட்டும பருவம்

     வீமனது எளிதில் வெல்லு மாற்றலுக்கும், அவன்முன் பகைவரது
வீரமின்மைக்கும்  ஏற்ற உவமை கூறினார். சூரர்க்கெல்லாம் முதலெண்ணும்-
சூரர்களெல்லாருள்ளுஞ்சிறந்த வென்றபடி. தம்பியர் - துச்சாதனன் முதலியோர்.
ஆரம் - ஹாரம்:  பி-ம்:-காந்தாரர்.                             (114)

6.-இருதிறத்துப்பெருவீரருஞ் செய்த கடும்போர் வருணனை.

வரத்தான்மறையாற்றாம்பெற்ற வரிசாபங்கள்பிடித்ததனிக்
கரத்தான்மறைந்தவரவர்தங் கடைக்கண்படைக்கண்விரைந்துவிடுஞ்
சரத்தான்மறைந்ததகல்வானந் தரணிதலமச்சரந்துணித்த
சிரத்தான்மறைந்ததுகுகுருதிச் சேற்றான்மறைந்ததிசைநான்கும்.

     (இ - ள்.) வரத்தால் - (தேவர்கள் முதலியோர் தந்தருளிய) வரத்தினாலும்,
மறையால் - மந்திரத்தாலும், தாம் பெற்ற - தாங்கள் பெற்றுக்கொண்டுள்ள, வரி
சாபங்கள் - கட்டமைந்த விற்களை, பிடித்த - உறுதியாக ஏந்தியுள்ள, தனி
கரத்தால்- ஒப்பற்ற கையினால், அவர் அவர்தம் கடைக்கண் - அந்தந்தப்
போர்வீரரதுகண்ணின்கடை, மறைந்தது-;  படைக்கண் - (வில்லாகிய அந்த)
ஆயுதத்தில்,விரைந்துவிடும் - துரிதமாகப் பிரயோகிக்கிற, சரத்தால் -
அம்புகளினால், அகல்வானம் - பரந்த ஆகாயம், மறைந்தது-;அ சரம் - அந்த
அம்புகள், துணித்த -அறுத்துத்தள்ளிய, சிரத்தால் - (பகைவர்கள்) தலைகளால்,
தரணி தலம் -பூமியினிடம், மறைந்தது-; உகு - (அத்தலைகளினின்று) பெருகிய,
குருதி சேற்றால் -இரத்தக்குழம்பினால், திசை நான்கு உம் - நாற்றிசைகளும்,
மறைந்த - மறைந்தன;(எ - று.)

     அப்பொழுது போரில் வீரர்பலர் தாம் வரமாக அஸ்திரப்பிரயோகத்துக்கு
உரியமந்திரத்தோடு பெற்றுள்ள விற்களைத் தந்தங்கையில் ஏந்தித்தம்தம்
கண்ணுக்குநேராகமுன்னேபிடித்து அவற்றில் அளவிறந்த அம்புகளைத்தொடுத்து
அவற்றால் எதிரிகள்தலைகளைவீழ்த்தி எங்கும் இரத்தமயமாக்கின ரென்பதாம்.
மறையால் என்பதற்கு -தக்கமந்திரத்தை ஜபித்த பலத்தால் என்றும்,
மந்திரோபதேசத்தோடு என்றுங் கருத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவர்க்கும் 
அநேகஞ் சிறந்த விற்கள் உண்மை தோன்ற,'சாபங்கள்' எனப் பன்மையாற்
கூறினார். கடைக்கண் - கண்கடை:முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத்
தொகை: இலக்கணப்போலி.படையென்னும்பொதுப் பெயர் - இங்கே சிறப்பாய்
வில்லையுணர்த்தி, சுட்டுப்பெயர்மாத்திரமாய் நின்றது. மறைந்த-முற்று. பி-ம்:-
திரைநான்கும்.                                                (115)

7.-கடோற்கசனம்புகளால் துரியோதனன் பிரஜ்ஞையற்று விழுதல்.

துவசம்பிளந்துதேரூருந் துரகம்பிளந்துசுடர்மணிப்பொற்
கவசம்பிளந்துமார்பகமும் பிளந்தூடுருவக்கடோற்கசன்றான்
நவசந்திரமாமுனைவாளி தொடுத்தான்றொடுத்தநாழிகையின்
அவசம்பிறந்துதம்பியர்முன் விழுந்தானொருவர்க்கழியாதோன்.