பக்கம் எண் :

1

ஏழாவது

து ரோ ண ப ரு வ ம்

    வீட்டுமபருவம் என்பதற்குப் பொருள்கூறியது போலவே, இந்தத்
துரோணபருவமென்ற வடசொற்றொடர்க்கும் பொருளைக் கூறிக்கொள்க.
துரோணன் - பரத்துவாச முனிவனதுகுமாரன்; கிருபாசார்யனுடன் பிறந்தவளான
கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை :சகல சாஸ்திரங்களையும்
தன்பிதாவினிடம் கற்றுப் படைத்தொழிலைப் பரசுராமனிடத்துஏழுநாளிற் பயின்றவன்.
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திர சாஸ்திரங்களைக்கற்பித்த
ஆசிரியன். [முதலிற் சிறிதுகாலம் கிருபனும், பின்பு பிரதானமாகத் துரோணனும்
கௌரவபாண்டவர்க்கு வில் வித்தை பயிற்றி வைத்தன ரென அறிக] இவன்
துரியோதனாதியர்க்கு இரண்டாவது சேனைத்தலைவன். வைதிக
விரதாநுட்டானஞ்செய்கையில் தேவர்களா லேவியனுப்பப்பட்ட மேநகையின்
கட்டழகைக் கண்டு காதல்கொண்ட பரத்துவாச மகாமுனிவனது விருப்பத்தால் ஒரு
துரோணகும்பத்தில் பிறந்தமைபற்றி இவனுக்குத் துரோண னென்று பெயர் :
துரோணகும்பம் - பதக்களவு கொண்ட பாத்திரம். இனி, துரோணம் என்று
வில்லுக்குப் பெயருண்மையால், துரோணனென்பது - வில்வன்மைபற்றிவந்த
பெயரென்னவுமாம். இவன், அங்கிவேசமுனிவன்பக்கலிலும் படைகள் தேர்ந்தான்.

பதினோராம்போர்ச்சருக்கம்

     பத்து + ஒன்று = பதினொன்று :  உம்மைத்தொகையில் நிலை மொழி ஈற்று
உயிர்மெய்கெட இன்சாரியைதோன்றிற்று ; [நன். உயிர். 47.] ஒன்று + ஆம்=ஓராம் :
ஒன்று ஈற்றுயிர்மெய் கெட்டு னகரம் ரகராய் முதல் நீண்டது : [நன் - உயிர் : 38,
39,]

1.-கடவுள் வாழ்த்து

காயமும் புலனு மந்தக் காரணமு மாகி யெல்லாத்
தேயமும் பரந்து நின்று மீளவுஞ் சித்துஞ் சுத்த
மாயமு மாகி நீங்கி வருபெரு ஞானா னந்த
மாயவெம் பெருமா னென்னை யாண்டரு ளாழி யானே.

     (இ-ள்.) காயம்உம் - உடம்பும், புலன்உம் - (அதிலுள்ள) பஞ்ச
இந்திரியங்களின் உணர்வும், அந்தக்கரணம்உம் - (அவ்வுணர்வுக் கிடமான)
மனமும், ஆகி - (என்னும் இவற்றின்) வடிவமாய், எல்லாம் தேயம்உம் பரந்து
நின்று - எல்லாவிடங்களிலும் பரவி நிலைபெற்று, மீளஉம்-மறுபடியும், சித்துஉம்
சுத்தமாய்உம் ஆகி நீங்கி - உயிரும் பரிசுத்தமான மூலப்பிரகிருதியுமாய்
(அவ்வவ்விடங்களினின்று) பிரிந்து, வரு-(இங்ஙனம் *கற்பந்தோறும் மாறிமாறி)
வருகிற, பெரு ஞான ஆனந்தம் ஆய எம்பெருமான் - (மற்றையறிவுகளினுஞ்)
சிறந்த பேரறிவும் (மற்றையின்பங்களினுஞ்) சிறந்த


*கல்பம் - இங்கே, பிரமனாயுள் ; பிரமனது தினமன்று.