கார்போனனி யதிராவிதழ் மடியாவெறி கடல்வாய் நீர்போலுடன்மொய்த்தார்வெரு வுற்றோடிய நிருபர். |
(இ-ள்.) (அப்பொழுது), வெருவு உற்று ஓடிய நிருபர் - (முன்பு) அச்சம் மிக்குஓடிப்போன அரசர்கள், 'சிறுவன் - சிறு பிள்ளையான அபிமானது, தேர்-, போனது-ஒழிந்தது: பரி-தேர்க் குதிரை, போனது-; சிலை-வில், போனது-; போர்- (அவனது)யுத்தம், போனது-; இனி சென்று அமர் புரிவோம் - இனிமேல் (நாம் தைரியமாகப்)போய்ப் போர்செய்வோம்,' என நினையா என்று எண்ணி, கார் போல் நனி அதிரா -மேகம்போல மிகுதியாக ஆராவரித்து, இதழ் மடியா - (கோபத்தால்) உதட்டைக்கடித்துக் கொண்டு, ஏறி கடல்வாய் நீர் போல் - அலைவீசுகிற கடலில் யாற்று நீர்கள்(ஒருங்குவந்து விழுதல்) போல, உடன் மொய்த்தார் - ஒரு சேர (அபிமன்மேல்வந்து) நெருங்கினார்கள்; (எ - று.)- அபிமனுக்குக் கடலுவமைகூறியதனால், அவனதுகம்பீரத்தன்மை விளங்கும். பி-ம்: வெருவுறவோடிய. இதுமுதற் பத்துக்கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (245) 108.- எதிர்த்துவந்த துச்சாதனகுமாரனை அபிமன் தலையறுத்தல். துச்சாதனன்மகன்மன்னர்தொழுந்துச்சனியென்னும் நச்சாடரவனையானினிநானேபழிகொள்வே னிச்சாயகமொன்றாலெனவெய்தானவன்முடியோ டச்சாயகம்வடிவாள்கொடறுத்தானடலபிமன். |
(இ-ள்.) துச்சாதனன் மகன் - துச்சாதனனது புத்திரனான, மன்னர்தொழும்- அரசர்களால் வணங்கப்படுகிற, துச்சனிஎன்னும்-துச்சனியென்று பெயர் கூறுப்படுகிற, நஞ்சு ஆடு அரவு அனையான்-விஷத்தையுடைய படமெடுத்து ஆடுகிற பாம்புபோலக் கொடிய வீரன், 'இனி- இப்பொழுது, நானே - யான் ஒருவனே, இ சாயகம் ஒன்றால்-இந்த ஓரம்பினால், பழி கொள்வேன்-(அபிமனைக்கொல்லுதலாகிய) பழியை ஏற்றுக்கொள்வேன் (தவறாமற் கொல்வேன்), என - என்று (வீரவாதஞ் செய்துகொண்டு), எய்தான்-(அபிமன்மேல் ஓரம்பைப்) பிரயோகித்தான்; (உடனே), அடல் அபிமன் - வலிமையையுடைய அபிமந்யு, அவன் முடியோடு - அந்தத் துச்சனியில் தலையுடனே, அ சாயகம் - அந்த அம்பையும், வடி வாள்கொடு அறுத்தான் - கூரிய (தன்) வாளினால் அறுத்திட்டான்; (எ - று.) துச்சனியென்பது - துச்சாதனியென்பதன் திரிபுஆக இருக்கலாம். துச்சாசனனதுமகன் சயசேன னென்று பெருந்தேவனார் பாராதத்தால் தெரிகிறது. விரைவுதோன்ற, முடியை முன்னும் சாயகத்தைப் பின்னுங் கூறினார். பழிகொள்ளுதல் - இலக்கணனைக் கொன்றதாகிய அவன் செய்த பழிக்கு எதிர்ப்பழிவாங்குதலுமாம். பழிகொள்ளுத லென்ற சொல்லின் தகுதியால், தேர் முதலியவற்றை யிழந்த வீரனைக் கொல்லுதல் பழிப்பாமென்பது, தோன்றும் நானே,ஏ- பிரிநிலையோடு, தேற்றம்.(246) |