பக்கம் எண் :

150பாரதம்துரோண பருவம்

109.- மூன்றுகவிகள்- எதிர்த்தஅபிமன் வாளால் மும்முறைவென்று
துரோணனை நகைத்தமை கூறும்.

துரியோதனன்மகனும்பொருதுச்சாதனன்மகனும்
புரியோதனமுனைவென்றமைபுரிவின்முனிகருதா
வரியோமெனுமறையாலடலம்பாயிரமெய்தான்
வரியோலிடுகழலானவைவாள்கொண்டுதுணித்தான்.

     (இ-ள்.) துரியோதனன் மகன்உம் - துரியோதனனுக்கு மகனான
இலக்கணனையும், பொரு துச்சாதனன் மகன்உம் - போர் செய்த துச்சாதனனுக்கு
மகனான துச்சனியையும், புரி யோதனம் முனை - போர்செய்கிற யுத்தகளத்தில்,
வென்றமை - (அபிமன்கொன்று) சயித்ததை, புரி வில் முனி-கட்டமைந்த
வில்லில்வல்ல துரோணாசாரியன், கருதா-எண்ணி, அரி ஓம் எனும் மறையால்-
'ஹரி! ஓம்' என்று தொடங்கிச் சொல்லப்படுகிற வேதமந்திரத்தைக் கொண்டு, அடல்
அம்பு ஆயிரம் எய்தான்-வலிமையுடைய  ஆயிரம் பாணங்களைத் தொடுத்தான்;
(தொடுக்க), வரி ஓல் இடு கழலான்-அழகிய ஒலித்தல் செய்கிற வீரக்கழலையுடைய
அபிமன், அவை - அந்த அம்புகளையெல்லாம், வாள் கொண்டு துணித்தான்-
வாளினால் துண்டித்தான்; (எ - று.)

     புரிவின் முனி என எடுத்து, அவர்கள்பக்கல் அன்பையுடைய
முனிவனெனினுமாம்; புரிவு- அன்பு, இன்- சாரியை. அரிஓம் -
திருமாலேபிரணவப்பொருள் என்பதைக்குறிக்குமென்ப.                 (247)

110.சொரியுங்கணைமழையேவுதுரோணாரியன்வில்லும்
பரியுங்கடவிரதத்தொடுபாகும்பலபலவாய்
முரியும்படிவடிவாள்கொடுமோதாவமர்காதா
விரியுஞ்சுடரெனநின்றனன்விசயன்றிருமகனே.

     (இ-ள்.) (அதுவுமன்றி), விசயன் திரு மகன் - அபிமன்,-  சொரியும் கணை
மழைஏவு-பொழிகிற பாணவர்ஷத்தைச் செலுத்துகிற, துரோண ஆரியன் -
துரோணசாரியனது, வில்உம்-, பரிஉம்-தேர்குதிரைகளும், கடவு இரதத்தொடு -
செலுத்துப்படுகிற தேருடனே, பாகுஉம் - சாரதியும், பல பல ஆய் முரியும்படி -
அநேகந் துண்டுகளாய் அழியும்படி, வடி வாள் கொடு மோதா- கூரிய
வாளாயுதத்தால் வீசி, அமர் காதா - போரை (உக்கிரமாக)ச் செய்து. விரியும் சுடர்
என நின்றனன்-(நெடுந்தூரம்) பரவுகிற (மிக்க) ஒளியையுடைய சூரியன்போல
(விளக்கமுற்று) நின்றான்; (எ - று.)                                (248)

111.ஒருக்காலழிதேரன்றியுமுருளாழிகொடேர்மே
லிருக்கால்வரமுக்கால்வரவெக்காலுமழித்தே
பெருக்காறணைசெய்தொத்தவிர்பிள்ளைப்பிறையனையான்
செருக்கானகைசெய்தான்வரிசிலையாசிரியனையே.

     (இ-ள்.) ஒரு கால் அழி தேர் அன்றிஉம்- ஒருதரம் தேரழிந்தது மாத்திர
மல்லாமல்,உருள் ஆழி கொள் தேர்மேல் - உருளுந்தன்மையுள்ள சக்கரங்களைப்
பூண்டவேறு தேரின் மேல், (துரோணன் ஏறிக்கொண்டு), இருகால் வர முக்கால்
வர -இரண்டாந்